சென்னை: யுவராஜ் தனியாளாகவே போட்டிகளை வென்று கொடுப்பார் என்று டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் டுமினி கூறியுள்ளார்.
இரண்டு முறை சாம்பியன் சென்னையுடன், டெல்லி டேர்டெவில்ஸ் இன்று சென்னையில் பலப் பரிட்சை நடத்த உள்ளது. இந்நிலையில், டெல்லி கேப்டன் டுமினி கூறியுள்ளதாவது: யுவராஜ்சிங்கிடமிருந்து மிகப்பெரிய இன்னிங்சுகளை எதிர்பார்க்க முடியும்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக யுவராஜ்சிங் ரொம்ப நாட்களாக விளையாடவில்லை என்பது பெரிய விஷயமில்லை. யுவராஜ்சிங் போட்டியை வென்று கொடுக்க கூடிய வீரர். இந்த ஐபிஎல் தொடரில், போட்டிகளை, யுவராஜ் தனியாளாகவே வென்றுதருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

யுவராஜ்சிங், ஆண்டுக்கு ஆண்டு தனது ஆட்டத்திறனை மேம்படுத்தி வந்துள்ளார். பல சாதனைகளுக்கு யுவராஜ் சொந்தக்காரர். எனவே, யுவராஜ்சிங் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. யுவராஜ்சிங்கிடம் மிகப்பெரிய ஆட்டங்களை டெல்லி எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. இவ்வாறு டுமினி கூறியுள்ளார்.
யுவராஜ்சிங்கை ரூ.16 கோடி கொடுத்து, டெல்லி டேர்டெவில்ஸ் நடப்பாண்டில் ஏலம் எடுத்துள்ளது. முன்னதாக அவர் பெங்களூருக்காக ஆடியது குறிப்பிடத்தக்கது.