பெங்களூர்: நடப்பு 8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்த போதும் அனைவரது பார்வையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 'இளம்புயல்' சர்பராஸ்கான் மீதுதான் இருக்கிறது.. அவரது நேற்றைய அசத்தல் ஆட்டம் முன்னணி வீரர்கள் பலரையும் ஈர்த்திருக்கிறது.
1997ஆம் ஆண்டு பிறந்தவர் மும்பையைச் சேர்ந்த சர்பராஸ்கான்.. 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கும் போது சர்பராஸ்கான் சிறுவன் தான்.. இப்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் ஒரே டிரெஸ்ஸிங் அறையில் சரிசமமாக நிற்கிறார்...

2009ஆம் ஆண்டு ஹாரீஸ் கோப்பைக்கான போட்டியில் சர்பராஸ்கான் 439 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தவர் சர்பராஸ்கான்.. மொத்தம் 421 பந்துகளை எதிர்கொண்டு 56 பவுண்டரிகள், 12 சிக்சர்களை பறக்கவிட்டார் சர்பராஸ்... இதற்கு முன்னர் ஹாரீஸ் கோப்பை போட்டியில் சச்சின் எடுத்த 326 ரன்களே சாதனையாக இருந்தது..
கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அதன் பின்னர் கடந்த ஆண்டு மும்பை மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையேயான முதல் தர கிரிக்கெட் போட்டியிலும் சர்பராஸ் ஆடினார். கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஒரு ரன் தான் அடித்தார். அதன் பிந்தைய போட்டிகளில் ஒரு அரை சதம் அடித்தார்.

நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டியில் வெறும் ரூ50 லட்சம் கொடுத்து சர்பராஸ்கானை வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அவரது முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரானது. அதில் 11 ரன்கள்தான் எடுத்தார்.
ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் விளையாடியவர்களிலேயே மிகவும் இளவயது வீரர் என்ற பெருமையுடன் களமாடி வருகிறார் சர்பராஸ். அண்மையில்கூட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உத்தப்பாவும் சர்பராஸ்கானும் மோதியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டவர்..
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 21 பந்துகளில் 45 ரன்களைக் குவித்த வேகத்தைப் பார்த்து கிரிக்கெட் பெருசுகள் அனைவரும் புகழ்ந்து தள்ளுகின்றனர்.. மியான்தத் மாதிரி.. இல்லப்பா அரவிந்த் டி சில்வா மாதிரிப்பா என புகழ்ந்து தள்ளுகிறார்கள்...