கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள உணவகத்தில் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பர்கர் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் காய்ச்சல் பிடித்து திரிகிறார்கள். சாப்பாடு, தூக்கத்தை மறந்து ஐபிஎல் போட்டிகளை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பார்க் பெவலியின் ஹோட்டல், 24 மணிநேரம் செயல்படும் ஜேம்சன் இன் ஷிராஸ் ஆகிய இடங்களில் ஐபிஎல் போட்டிகளையொட்டி சில சிறப்பு உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த உணவகங்களில் நைட் ரைடர்ஸ் பர்கர், குட் லென்த் ஃபோக்கேசியா உள்ளிட்ட 10 வகையான ஐபிஎல் ஸ்பெஷல் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டே கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம்.
இந்த உணவுத் திருவிழா வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. அசைவ பிரியர்களுக்கு மட்டும் அல்ல சைவ பிரியர்களுக்கும் சிறப்பு வகை உணவுகள் உண்டு. லலித் கிரேட் ஈஸ்டர்ன் உணவகத்தில் போட்டிகள் நடக்கும் நாட்களில் ரூ. 1, 500க்கு சைவம் அல்லது அசைவ சைட் டிஷ் மற்றும் அளவில்லா பீர் வழங்கப்படுகிறது. அதிலும் கொல்கத்தா அணி வெற்றி பெறும் நாட்களில் 20 சதவீதம் சலுகை விலையில் உணவுகள் விற்பனை செய்யப்படும் என்று லலித் கிரேட் ஈஸ்டர்ன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் சீசன் மே 24ம் தேதியுடன் முடிகிறது. இந்த போட்டிகளையொட்டி சிறப்பு உணவு வகைகள், சலுகைகளை அறிவிக்கலாமா என்ற யோசனையில் பிற உணவகங்கள் உள்ளன.