பெங்களூர்: நடப்பு ஐபிஎல் சீசனில் 1000 ரன்களை கடந்து விராட் கோஹ்லி புதிய சாதனையை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் ஆடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின், விராட் கோஹ்லி இதுவரை 4 சதங்களுடன், 919 ரன்களை குவித்துள்ளார். இதுவரை ஒரு ஐபிஎல் தொடரில் இத்தனை அதிக ரன்கள் அடித்தது யாருமில்லை.

கிறிஸ் கெயில் மற்றும் மைக்கேல் ஹஸ்சி ஆகியோர் 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஒரே சீசனில் 733 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். இந்த சாதனையை தகர்த்துள்ள விராட் கோஹ்லிக்கு ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை கடக்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்று நடைபெறும் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 81 ரன் எடுத்தாலே விராட் அந்த சாதனையை நிகழ்த்த் முடியும். ஒருவேளை இந்த போட்டியில் பெங்களூர் தோல்வியடைந்தால், நாளைய எலிமினேட்டர் ரவுண்டில் வென்ற அணியோடு வெள்ளிக்கிழமை பெங்களூர் மோத வேண்டிவரும். அதில் வென்றால், ஞாயிற்றுக்கிழமை பைனலுக்கு பெங்களூர் செல்லும்.
இந்த கணக்குப்படி பார்த்தால் விராட் இன்றைய போட்டியோடு சேர்த்து மொத்தம் 3 போட்டிகளில் ஆட முடியும். ஒருவேளை இன்றைய போட்டியில் பெங்களூர் வென்றால், பைனல் போட்டியோடு சேர்த்து 2 போட்டிகளில் ஆட முடியும். விராட் இப்போதுள்ள ஃபார்முக்கு ஆயிரம் ரன்களை கடக்க 2 போட்டிகள் அல்லது ஒரு போட்டியே கூட போதும் என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.