முரளி விஜய் ராசி "ஒர்க் அவுட்" ஆகுமா பஞ்சாப்புக்கு?
சென்னை: எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் அந்த அணி தற்போது அதிரடியாக தனது கேப்டனை மாற்றியுள்ளது. முரளி விஜய் கேப்டனாகியுள்ளார். இது அவர்களுக்கு சிறந்த பலனைத் தருமா என்பது எதிர்பார்ப்புக்குரியதாகியுள்ளது.
கேப்டனாக இதுவரை டேவிட் மில்லர் இருந்து வந்தார். ஆனால் அவரது தலைமையில் அணி தடுமாறிக் கொண்டிருக்கிறது. அவரது பேட்டிங்கும் சரியில்லை. இதனால் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது பஞ்சாப்.
இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இதையடுத்து ஒரு அதிரடி நடவடிக்கையை பஞ்சாப் அணி நிர்வாகம் எடுத்துள்ளது.

கேப்டன் விஜய்
அணியின் கேப்டன் பதவியிலிருந்து மில்லரை நீக்கி விட்டனர். அவருக்குப் பதில் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய்யை கேப்டனாக்கியுள்ளனர்.

இன்று முதல் மோதல்
கேப்டன் முரளி விஜய் தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இன்று தனது முதல் போட்டியாக வலிமை வாய்ந்த குஜராத் லயன்ஸ் அணியைச் சந்திக்கவுள்ளது.

சாதிப்பாரா விஜய்
தொடக்க ஆட்டக்காரராக முத்திரை பதித்துள்ள முரளி விஜய் கேப்டனாக இன்று அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். முதல் போட்டியாக இன்று ராஜ்கோட்டில் நடைபெறும் ஆட்டத்தில் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியுடன் மோதுகிறது பஞ்சாப்.

அடிமட்டத்தில்
தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் கிடக்கிறது பஞ்சாப். இத்தனைக்கும் மேக்ஸ்வெல், மில்லர், முரளி விஜய் அதிரடி வீரர்கள் இருக்கின்றனர். ஆனாலும் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது பஞ்சாப்.

விஜய் அதிரடி
இந்தத் தொடரில் முரளி விஜய் அதிரடியாக ஆடி வருகிறார். 6 போட்டிகளில் அவர் 143 ரன்களைக் குவித்துள்ளார். அதேசமயம், மில்லர் 6 போட்டிகளில் வெறும்76 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications