ராஜ்கோட்: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
10வது ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாசில் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு ஜேசன் ராய் மற்றும் மெக்கல்லம் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக இறங்கினர். ராய் 12 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறிது நேரம் அதிரடி காட்டிய மெக்கல்லம் 24 பந்தில் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 3வது வீரராக கேப்டன் ரெய்னா களமிறங்கினார்.
தொடர்ந்து வந்த பின்ச் (15) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, குஜராத் அணி ரன் வேகம் குறைந்தது. இதையடுத்து தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்த ரெய்னா, அணியை சரிவில் இருந்து மீட்டார். இந்த ஜோடி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.
கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் பறக்க விட்ட தினேஷ் கார்த்திக் 47 ரன்கள் எடுத்த போது யாதவ் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இதையடுத்து 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது குஜராத். 68 ரன்கள் எடுத்து இறுதி வரை ரெய்னா ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அந்த அணிக்கு காம்பீர் மற்றும் க்ரிஸ் லின் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தனர். காம்பீர் 48 பந்துகளில் 76 ரன்களையும், லின் 41 பந்துகளில் 93 ரன்களை குவித்து கொல்கத்தாவின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் 14.5 ஓவரிலேயே 184 ரன்கள் வெற்றி இலக்கை எட்டியது கொல்கத்தா.