ஹைதராபாத்: உலகின் மாபெரும் டி20 கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் போட்டித்தொடர் நாளை தொடங்குகிறது. ஹைதராபாத்தில் நாளை தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வருடந்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடரின் 10வது சீசன் நாளை தொடங்குகிறது. . இந்த கிரிக்கெட் திருவிழா மே 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 56 லீக் ஆட்டங்கள், பிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் நடத்தப்படுகிறது.
இப்போட்டிக்கான பெங்களூர் அணி கேப்டனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. தோள்பட்டை காயத்தால் கேப்டன் கோஹ்லி முதல் இரு போட்டிகளில் களமிறங்க முடியாது என்பதால் பெங்களூர் அணி இந்த மாற்று ஏற்பாட்டை செய்துள்ளது. இதனிடையே முதுகு வலியால் அவதிப்படும் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்காக இவ்வாண்டு ஆடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
கோஹ்லியின் உடல்நிலை குறித்து ஏப்ரல் 2வது வாரத்தில் பரிசோதனைகள் நடத்தி பிசிசிஐ மருத்துவ குழு பதிலளிக்க உள்ளது