சென்னை ரசிகர்களே! பாசம் இருக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா செய்வீங்க? ஆசைப்பட்டு ஏமாந்ததுதான் மிச்சம்
சென்னை : 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை துவக்கி இருக்கிறது சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்.
இந்தப் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த சென்னை அணிக்கு விக்கெட் விழுந்த போது சென்னை ரசிகர்கள் உற்சாகக் குரல்கள் எழுப்பினர். எதற்கு தெரியுமா?

ஆட்டம்
முதலில் ஆடிய பெங்களூர் அணி 70 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்த சிறிய இலக்கை சேஸ் செய்தது சென்னை. சென்னை அணியின் துவக்க வீரர்களாக ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு களமிறங்கினர்.

உற்சாகம்
வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அதன் பின் சுரேஷ் ரெய்னா 19 ரன்களில் வெளியேறிய போது சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். காரணம், தோனி நான்காம் இடத்தில் இறங்கப் போகிறார் என்பதே.

கேதார் ஜாதவ்
ஆனால், தோனி களமிறங்காமல், கேதார் ஜாதவ்வை அனுப்பி வைத்தார். அதனால், சென்னை ரசிகர்கள் தோனியின் பேட்டிங்கை பார்க்க முடியவில்லையே என சோகத்தில் ஆழ்ந்தனர்.

காத்திருந்தனர்
அடுத்து, ராயுடுவின் விக்கெட் போன போது, முன்பை விட அதிக உற்சாகம் அடைந்து தோனி, தோனி என முழக்கமிட்டனர் சென்னை ரசிகர்கள். ஆனால், இப்போதும் தோனி வரவில்லை. சரி, இன்னும் ஒரு விக்கெட் விழுந்தால் தோனி வருவார் என மீண்டும் காத்திருக்கத் துவங்கினர்.

கொஞ்சம் ஓவர்
"இது என்னடா தங்கள் அணிக்கு விக்கெட் விழுந்தால் குஷியாகிறார்களே" என பலரும் இதை வியந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.
தோனி மேல பாசம் இருக்கலாம்.. அதுக்காக, விக்கெட் போகும் போது சந்தோஷப்படறது, டீமுக்கு விக்கெட் போகணும்னு நினைக்கறது.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்!!


Click it and Unblock the Notifications