ஹைதராபாத் : 2019 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வெறும் 2 நிமிடத்தில் முடிவடைந்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
வருகின்ற மே 12ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெற்றுள்ளது.
டிக்கெட் விற்பனை குறித்த முன்னறிவிப்பு சரியாக வெளியாகவில்லை என கூறப்படுகிறது. எனினும், அது குறித்து அறிந்த சில ரசிகர்கள், டிக்கெட் வாங்க குறிப்பிட்ட நேரம் வரை காத்திருந்து ஆன்லைனில் டிக்கெட் வாங்க முயற்சி செய்த போது, அனைத்து டிக்கெட்களும் விற்று முடித்துவிட்டதாக அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கேப்டன் எடுத்த அந்த ஒரு முடிவால் சன்ரைசர்ஸ் தோல்வி.. தட்டுத் தடுமாறி.. கடைசி ஓவரில் வென்ற டெல்லி!!
இரண்டு நிமிடம் வரை கூட டிக்கெட்கள் விற்பனைக்கு கிடைக்கவில்லை என்பதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து டிக்கெட்களையும் 2 நிமிட இடைவெளிக்குள் விற்றுத் தீர்ந்தது எப்படி? எத்தனை பேருக்கு டிக்கெட் கிடைத்தது? எத்தனை டிக்கெட்கள் ஆன்லைன் விற்பனைக்கு இருந்தது? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் ரசிகர்கள். ஆனால், இதற்கெல்லாம் பதில் இல்லை.
ஹைதராபாத் மைதானத்தின் இருக்கை எண்ணிக்கை 39,000 ஆகும். இதில் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியின் போதும் சுமார் 30,000 இருக்கைகளுக்கான டிக்கெட்கள் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இறுதிப் போட்டிக்கு எத்தனை டிக்கெட்கள் விற்பனைக்கு கிடைத்தது என தெரியவில்லை.
அதே போல, ரூ.1,000 முதல் ரூ.22,500 வரை விலை கொண்ட டிக்கெட்கள் விற்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால், இந்த முறை ரூ,5000ற்கு மேல் உள்ள எந்த டிக்கெட்டும் விற்பனைக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
எங்கே தாங்க போச்சு டிக்கெட்லாம்? சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள்.. நாங்க எப்படி ஃபைனல் போட்டியை நேரில் பார்ப்பது? என அப்பாவியாய் கேட்டு நிற்கிறார்கள் ரசிகர்கள்! ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது.. டிக்கெட் கேட்ட ரசிகர்களுக்கு அல்வா கொடுக்கப்பட்டுள்ளது.