அபராதம் போட்டும் ஒண்ணும் நடக்கலை.. மாத்தறது தான் ஒரே வழி.. ஐபிஎல் பிளே-ஆஃப்-இல் முக்கிய மாற்றம்!
மும்பை : 2019 ஐபிஎல் இன்னும் இரு வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. பிளே-ஆஃப் சுற்று வரும் மே 7 முதல் துவங்க உள்ளது.
இந்த நிலையில், பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிளே-ஆஃப் போட்டிகள் இரவு 7.30 மணிக்கு துவங்கும் என கூறப்படுகிறது. ஏன் இந்த திடீர் நேர மாற்றம்?

நீளும் போட்டி நேரம்
இந்த சீசனின் லீக் போட்டிகள் தினமும் இரவு 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி போட்டி முடிய வேண்டும் என்றால், இரவு 11.30க்குள் கடைசி பந்து வீசப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், பல போட்டிகள் இரவு 11.45 முதல் 12க்கும் மேல் கூட நீள்கிறது.

ரசிகர்கள் புகார்
இதனால், ரசிகர்கள் பாதியிலேயே போட்டியை நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். பலரும் இது குறித்து சமூக வலைதளங்களில் புகார் கூறினர். ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே, திட்டமிட்டபடி பந்து வீசி முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் கேப்டன்களுக்கு அபராதமும் விதித்துள்ளது. அப்படியும் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.

அபராதம்
ரோஹித் சர்மா, விராட் கோலி, அஜின்க்யா ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின் என நான்கு அணிகளின் கேப்டன்கள் இதுவரை குறைந்த ஓவர் ரேட் வைத்திருந்ததற்காக தலா 12 லட்சம் அபராதம் செலுத்தி உள்ளனர்.

முன்னேற்பாடு
அபராதம் போட்டும் முடிவுக்கு வராத இந்த பிரச்சனை பிளே-ஆஃப் சுற்றிலும் நீடித்தால் அதிக பார்வையாளர்களை இழக்க நேரிடும் என்பதால், முன்னேற்பாடாக போட்டிகள் இரவு 7.30க்கு துவங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

பிளே-ஆஃப் அட்டவணை
ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகள் -
தகுதிப் போட்டி 1 மே 7 அன்று சென்னையில் நடைபெறும்
தகுதி நீக்கப் போட்டி (எலிமினேட்டர்) மே 8 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறும்
தகுதிப் போட்டி 2 மே 10 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறும்
இறுதிப் போட்டி மே 12 அன்று ஹைதராபாத் நகரில் நடைபெறும்


Click it and Unblock the Notifications