சென்னை அணி
இந்தப் போட்டி நடைபெற்ற கொல்கத்தா மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்காது என கூறப்பட்டது. எனினும், இம்ரான் தாஹிர், ஜடேஜா, சான்ட்னர் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கினார் தோனி.
ஏன் பந்துவீச்சு?
அது மட்டுமின்றி டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த மைதானத்தில் ரன் குவிப்பது எளிது என தெரிந்தும், முதலில் ஆடும் அணி எவ்வளவு ரன் எடுக்கிறார்கள் என தெரிந்து கொள்ளவே தான் பந்துவீச்சை தேர்வு செய்வதாக கூறினார் தோனி.
பேட்டிங் மோசம்
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் துவக்க வீரர் கிறிஸ் லின் மட்டுமே 51 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களே எடுத்து வரிசையாக வெளியேறினர். 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழந்து 161 ரன்கள் எடுத்தது கொல்கத்தா.
தாஹிர் சுழல்
சென்னை அணியில் சான்ட்னர் 1, ஷர்துல் தாக்குர் 2, இம்ரான் தாஹிர் 4 விக்கெட் வீழ்த்தினர். இம்ரான் தாஹிர் சுழலில் நான்கு முக்கிய வீரர்கள் சிக்கினர். கிறிஸ் லின், ராணா, உத்தப்பா, ரஸ்ஸல் என நான்கு வீரர்களையும் இம்ரான் வீழ்த்தியதே, கொல்கத்தா அணியின் ரன் வேகம் குறைய முக்கிய காரணம்.
போராடிய ரெய்னா
அடுத்து சென்னை அணியின் சேஸிங்கில் வாட்சன் 6 ரன்களில் வெளியேறி ஏமாற்ற, டு ப்லேசிஸ் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரெய்னா மட்டுமே தனியாக போராடினார். ராயுடு 5, ஜாதவ் 20, தோனி 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பொறுப்பான கூட்டணி
கடைசி நான்கு ஓவர்களில் ஜடேஜா - ரெய்னா இணைந்து பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர். கடைசி நேரத்தில் இருவருமே சிக்ஸ் அடிக்க முயற்சிக்கவில்லை. ஜடேஜா 19வது ஓவரில் ஹாட்ரிக் ஃபோர் அடித்தார். இறுதியில் சென்னை அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் நின்ற ரெய்னா, 58 ரன்கள் அடித்து இந்த சீசனில் தன் முதல் அரைசதம் கடந்தார்.
பரிதாப கொல்கத்தா
சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழு போட்டிகளில் ஆறு வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி, தான் ஆடிய கடைசி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து பரிதாப நிலையை அடைந்துள்ளது. அந்த அணி டெல்லி மற்றும் சென்னை அணிக்கு எதிராக ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.