என்னால முடியும்.. ஆனா அதைப் பத்தி பேசப்படாது! தோல்விக்கு பின் மழுப்பிய ஆண்ட்ரே ரஸ்ஸல்!!
கொல்கத்தா : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் பெங்களூர் அணி 213 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கேப்டன் கோலி 100, மொயீன் அலி 66 ரன்கள் குவித்தனர். இந்த இமாலய இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா அணி துவக்கத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ரஸ்ஸல், ராணா அதிரடி
அதன் பின்னர் 13வது ஓவர் முதல் ஆண்ட்ரே ரஸ்ஸல், நிதிஷ் ராணா ஜோடி அபாரமாக ஆடி கடைசி ஓவரில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு போட்டியை எடுத்துச் சென்றனர்.

போராடி தோல்வி
எனினும், கடைசி ஓவரில் கொல்கத்தா அணியால் 13 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதையடுத்து, கொல்கத்தா போராடி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு காரணம், ரஸ்ஸல்-ஐ பேட்டிங் வரிசையில் மேலே இறக்காமல் போனது தான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

முன்பே இறங்கி இருக்கலாம்
பலரும், ஓவருக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலை இருந்த போதே ரஸ்ஸலை களமிறக்கி இருக்கலாம் என கூறினர். ரஸ்ஸல் இந்தப் போட்டியில் ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். ஆனால், ரஸ்ஸல் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கி இருந்தால் போட்டியில் கொல்கத்தா வென்று இருக்கும் என கூறப்பட்டது.

பேசக்கூடாது
இது குறித்து போட்டி முடிந்த பின் ஆண்ட்ரே ரஸ்ஸலிடம் கேட்கப்பட்டது. ஆனால், ரஸ்ஸல் வாயில் விரலை வைத்து.. "இதெயெல்லாம் வெளியில் பேசக்கூடாது" என்பது போல சைகை செய்தார். எனினும், அதை பற்றி நேரடியாக பேசாமல், சுற்றி வளைத்து பேசினார்.

திட்டம்
தான் 4வது இடத்தில் இறங்கத் தயாராகவே இருப்பதாகவும், அணி இருக்கும் சூழ்நிலையில் தான் அதை செய்ய தயாராக இருப்பதாக கூறினார். ரஸ்ஸல் நேரடியாக இதை பேச மறுத்ததன் மூலம், கொல்கத்தா அணி நிர்வாகத்தின் திட்டத்தில் ரஸ்ஸல் ஐந்தாவது, ஆறாவது இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என கூறியுள்ளார்கள் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications