மோசமான சராசரி
இந்த ஐபிஎல் தொடரில் குல்தீப் யாதவ் வெறும் நான்கு விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினார். அவரது ரன் சராசரி 71.50. இது மிக, மிக மோசமான சராசரி ஆகும். அந்தளவு ரன்களை வாரி இறைத்தார் குல்தீப். இந்த நிலையிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
கண்ணீர்
ஆனால், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மொயீன் அலி பேட்டிங் செய்த போது, குல்தீப் யாதவ் பந்து வீசினார். அந்த ஓவரில் மொயீன் அலி பவுண்டரியாக அடித்துத் தள்ள, பெங்களூர் அணி 27 ரன்கள் குவித்தது. அந்த ஓவரின் முடிவில் தன் நிலையை நினைத்து கண்ணீர் வடித்தார் குல்தீப் யாதவ்.
வாய்ப்பு மறுப்பு
பார்க்கவே, பரிதாபமாக இருந்த குல்தீப் யாதவ்வுக்கு அதன் பின் கொல்கத்தா அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர், தரவரிசையில் டாப் டென்னில் இருக்கும் பந்துவீச்சாளர் என்றாலும், ஐபிஎல் செயல்பாடு குல்தீப் யாதவ்வை கடுமையாக பாதித்தது.
தோனி ஆறுதல்
இந்த சூழ்நிலையில் தான் தோனி ஒருவர் மூலம் ஆறுதல் கூறி தகவல் அனுப்பியுள்ளார். அதில் குல்தீப் யாதவ் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதோடு, இந்த நேரத்தில் விளையாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நம்பிக்க பெற்ற குல்தீப்
இந்த வார்த்தைகள் சாதாரண வார்த்தைகள் தான். ஆனால், ஒரு மூத்த, அனுபவ வீரர் தன்னை நினைத்து, ஆறுதல் செய்தி அனுப்பி உள்ளார் என்பதை எண்ணி, தன் சோகத்தில் இருந்து மீண்டுள்ளார் குல்தீப் யாதவ்.
எப்போதும் உதவும் தோனி
இது குறித்து குல்தீப் கூறுகையில், "தோனி அனுப்பிய செய்தி எனக்கு பெரும் அளவில் உதவியது. நான் அறிமுகமானதில் இருந்தே தோனி எனக்கு தூண் போல இருந்து உதவி வருகிறார்." என்று கூறி நெகிழ்ந்தார்.
தோனி அறிவுரை
மக்கள் எப்போதும் அவர் ஸ்டம்ப்புகளுக்கு பின் இருந்து எப்படி உதவுகிறார் என்பது குறித்தே பேசி வருகிறார்கள். ஆனால், அவர் போட்டிக்கு இடையேவும், போட்டிக்கு பின்னும் அளிக்கும் அறிவுரை பெரிய அளவுக்கு உதவும்" என்று கூறினார் குல்தீப்.