முதல் இரண்டு அணிகள்
ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பெற்று நுழையும் அணிகள், முதல் தகுதிச் சுற்றில் மோதும். அதில் தோல்வி அடைந்தாலும், மற்றொரு வாய்ப்பாக இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்று இறுதிப் போட்டியை அடையலாம்.
2வது தகுதிச் சுற்று
அதே போல, மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணிகள் தகுதி நீக்கப் போட்டியில் (Eliminataor) மோதும். அதில் தோல்வி அடைந்தால், வெளியேற வேண்டும். வென்றால், இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆடி, அதிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.
நெட் ரன் ரேட்
தங்கள் கடைசி லீக் போட்டிக்கு முன்பாகவே, பஞ்சாப் அணி பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து இருந்தது. சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தது. எனினும், டெல்லி அணியும் 18 புள்ளிகள் பெற்று நெட் ரன் ரேட் அடிப்படையில் 2ஆம் இடத்தில் இருந்தது.
வாழ்வா, சாவா நிலை
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமிருந்த நிலையில், அந்த அணி வெற்றி பெற்றால் 18 புள்ளிகள் பெற்று நெட் ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தை பிடிக்கும் என்ற நிலை. பஞ்சாப் போட்டியில், சென்னை மோசமாக தோல்வி அடைந்தால் நெட் ரன் ரேட் சரிந்து, டெல்லி அணிக்கும் கீழே இறங்கி மூன்றாம் இடத்தை பிடிக்கும். அப்படி நடந்தால், பிளே-ஆஃப் சுற்றில் வாழ்வா, சாவா நிலையில் ஆட வேண்டி இருக்கும்.
சென்னையை கவிழ்க்க திட்டம்
இதை தவிர்க்க, பஞ்சாப் போட்டியில் சென்னை வெற்றி பெற வேண்டும். அல்லது குறைந்த ரன் வித்தியாசத்தில் அல்லது குறைந்த பந்துகள் வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டும். இதை வைத்து சென்னை அணியை கவிழ்க்க திட்டம் போட்டார் பஞ்சாப் கேப்டன் அஸ்வின்.
என்ன திட்டம்?
அதாவது, சென்னை அணியை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ள வேண்டும். இந்தப் போட்டியில், சென்னை அணி 171 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. 14.3 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கை பஞ்சாப் எட்டினால், சென்னை நெட் ரன் ரேட் சரிந்து, மூன்றாம் இடத்திற்கு செல்லும். இது தான் அஸ்வினின் திட்டம்.
ராகுல் அதிரடி
பஞ்சாப் அணியின் சேஸிங்கில் கிறிஸ் கெயில் நிதானம் காட்டினார். ஆனால், ராகுல் இதுவரை இல்லாத அளவு துவக்கம் முதல் அதிரடியாக ஆடினார். 19 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 36 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே கெயில் ஆட்டமிழந்தார்.
முன்னே வந்த பூரன்
இவர்கள் சென்ற பின் மாயங்க் அகர்வாலுடன், அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்ய வந்தார். எனினும், தோனி பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தி பஞ்சாப் அணியை 15 ஓவர்களை கடக்கச் செய்தார். அதனால் சென்னை அணியின் நெட் ரன் ரேட் தப்பித்தது.
மீசையில் மண் இல்லை
அஸ்வின் போட்ட திட்டத்தால், பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஆனால், முக்கிய நோக்கமான "காலை வாரி விடுதல்" தோல்வி அடைந்தது. தோனி, தன் அணி தோல்வி அடைந்தாலும், பிளே-ஆஃப்பில் சிக்கல் இல்லாமல் இருக்கப் போகிறோம் என "மீசையில் மண் ஒட்டாமல்" குஷியானார்.