வழக்கம் போல் வாட்சன்…
பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணிக்கு பாப் டு ப்லேசிஸ் அபார துவக்கம் அளித்தார். வாட்சன் வழக்கம் போல 10 ரன்களைத் தாண்டாமல், 7 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார்.
ரெய்னா அரைசதம்
ரெய்னா, கடந்த போட்டி போலவே, இந்தப் போட்டியிலும் அருமையாக ஆடி அரைசதம் அடித்தார். டு ப்லேசிஸ் 96 ரன்கள் அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். கடைசியாக 3 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் வந்த தோனி பவுண்டரி அடித்து தெறிக்கவிடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
தோனி ஏமாற்றம்
ஆனால், கடைசி வரை அவர்கள் காத்துக் கொண்டு மட்டுமே இருந்தனர். தோனி 12 பந்துகளை சந்தித்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் தன் ரசிகர்களை ஏமாற்றினார்.
சென்னை சொதப்பல்
ராயுடு 1, ஜாதவ் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்து தங்கள் பணியை "சிறப்பாக" செய்தனர். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்தது. நிச்சயம் சென்னை அணியால் 190-200 ரன்கள் வரை எடுத்திருக்க முடியும். எனினும், கடைசி நேரத்தில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.
ராகுல் மிரட்டல்
பின்னர், சேஸிங் செய்ய வந்த பஞ்சாப் அணிக்கு ராகுல் மிரட்டல் துவக்கம் அளித்தார். 36 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார் ராகுல். கெயில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார்.
எளிய வெற்றி
கடைசி நேரத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறினாலும், ராகுல் அதிரடியால், ரன் ரேட் அழுத்தம் இல்லாமல், எளிதாக 18வது ஓவரில் வெற்றியை தொட்டது பஞ்சாப் அணி. இந்த வெற்றியால் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஆறுதல் அடைந்தார். இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடம் பெற்று இந்த சீசனை முடித்துக் கொண்டது.
பிளே-ஆஃப் நிலை
மறுபுறம் சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகளுள் முதல் இரண்டு இடங்களை உறுதி செய்தது. இதன் மூலம், முதல் தகுதிப் போட்டியில் தோல்வி அடைந்தாலும், தகுதி நீக்கப் போட்டி மூலம், இறுதிப் போட்டிக்கு முன்னேற இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும்.