விசாகப்பட்டினம் : ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தகுதி நீக்கப் போட்டியில் டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்.
இந்தப் போட்டியில் 163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி ஒரு கட்டத்தில் விக்கெட்களை இழந்து, இலக்கை எட்டுவது சந்தேகம் என்ற நிலையில் இருந்தது. அப்போது, 18வது ஓவரில் அதிரடி காட்டிய ரிஷப் பண்ட்டால் 22 ரன்கள் சேர்த்தது டெல்லி. அது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் 21 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ரிஷப் பண்ட்டை எப்போதும் ஆதரித்து வரும் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வான், உலகக்கோப்பை அணியில் ரிஷப் பண்ட்டை ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
ட்விட்டரில் மைக்கேல் வான் இப்படி பதிவிட்டுள்ளார். "எப்படி ரிஷப் பண்ட் உலகக்கோப்பை அணியில் இல்லை? இந்தியாவிற்கு நிச்சயம் மாற்றம் செய்ய நேரம் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
உலகக்கோப்பை அணிக்கான தேர்வில் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இடையே மாற்று விக்கெட் கீப்பர் இடத்தை பிடிக்க போட்டி நிலவியது. இறுதியாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றார்.
அப்போது முதல், ரிஷப் பண்ட்டை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என கூறி வருகிறார் மைக்கேல் வான். உலகக்கோப்பை தொடர் மே 30 முதல் துவங்க உள்ளது. அதற்குள் அணியில் மாற்றம் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார் வான்.