
தீவிரவாத தாக்குதல்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. அதில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதையடுத்து, பாகிஸ்தான் நாட்டுடனான உறவை பல இந்திய நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தின.

இந்திய நிறுவனம் தடாலடி
பாகிஸ்தான் சூப்பர் லீக் எனும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நடத்தி வந்த டி20 தொடரை தயாரித்து, ஒளிபரப்பும் உரிமை பெற்றிருந்த இந்திய நிறுவனம் ஒன்று, அதை பாதியிலேயே நிறுத்திக் கொண்டது. இதனால், அந்த டி20 ஒளிபரப்பில் சிக்கல் ஏற்பட்டது.

தடை
இதை மனதில் வைத்து பாகிஸ்தான் நாட்டின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் இந்தியாவின் டி20 தொடரான ஐபிஎல் தொடரை பாகிஸ்தான் நாட்டில் ஒளிபரப்ப தடை விதித்துள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்
பாகிஸ்தான் அரசாங்கம் தடை விதித்தாலும், பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் ஐபிஎல் தொடரை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர். கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இணையம் மூலமாக பார்க்க முடியுமா என இணையத்தில் தேடி வருகின்றனர் அந்நாட்டு ரசிகர்கள்.

பாதிப்பு
பாகிஸ்தான் அமைச்சர் இந்தத் தடையால் ஐபிஎல் பெரியளவில் வருமானத்தை இழக்கும் என கூறினார். அவர் கூறுமளவு பெரியளவுக்கு பாதிப்பு இல்லையென்றாலும், ஐபிஎல் தொடரின் வருமானத்தில் சிறிதளவு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications