போன வருஷம் சொன்னதையே.. திரும்ப சொன்ன கோலி, டி வில்லியர்ஸ்.. பாவமாக பார்க்கும் ரசிகர்கள்!
பெங்களூர் : 2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
தான் ஆடிய 13 போட்டிகளில் 9 தோல்விகளை சந்தித்து மிகப் பரிதாபமாக காட்சி அளிக்கிறது பெங்களூர் அணி. அந்த அணிக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மட்டுமே மீதமுள்ளது.

ஆதரவு
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில், அடுத்த ஆண்டும் ரசிகர்கள் தங்கள் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டு வெறுப்பேற்றியுள்ளனர் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ்.

வீடியோ
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் கடைசி வாய்ப்பை இழந்தது. தன் கடைசி போட்டியில் ஹைதராபாத் அணியை சந்திக்க உள்ளது. இந்த நிலையில், கோலி - டி வில்லியர்ஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, ஆதரவு கோரும் வீடியோ வெளியாகி உள்ளது.
நன்றி
அதில், டி வில்லியர்ஸ், கோலி, இருவரும், ராஜஸ்தான் போட்டியில் மழையால் சுமார் மூன்று மணி நேரப் போட்டி தடைபட்ட போதும் ரசிகர்கள் காத்திருந்ததை குறிப்பிட்டு அவர்களுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

ரொம்பப் பாவம்
மேலும், கடைசிப் போட்டியில் வெற்றி - தோல்வி குறித்த கவலை இல்லாவிட்டாலும், நாங்கள் அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என தெரிவித்தனர். வழக்கம் போல, அடுத்த சீசனில் சிறப்பாக ஆடுவோம் எனக் கூறி அடுத்த சீசனுக்கு இப்போதே ஆதரவை கேட்டுக் கொண்டனர்.
போன வருஷமும் இதே தானப்பா சொன்னீங்க.. பெங்களூர் ரசிகர்கள் ரொம்பப் பாவம்..!


Click it and Unblock the Notifications