அம்பயரின் தவறான தீர்ப்பு.. கடுப்பாகி அம்பயர் அருகே வந்த கோலி.. அப்புறம் என்ன நடந்தது?
பெங்களூர் : ஐபிஎல் தொடரில் சகட்டுமேனிக்கு தவறான அம்பயர் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே, தவறான அம்பயர் முடிவுகளால் பாதிக்கப்பட்ட பெங்களூர் அணியின் கேப்டன் கோலி மீண்டும் அப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பந்துவீசியது பெங்களூர் அணி. அந்த அணியின் கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 20 ரன்கள் குவித்து அசத்தினார்.

தவறான தீர்ப்பு
இந்த நிலையில், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை அம்பயர் நைகல் லாங், நோ பால் என அறிவித்தார். ஆனால், ரீபிளேவில் அது நோ பால் இல்லை என தெரிந்தது. இதையடுத்து, உமேஷ் யாதவ் அம்பயரிடம் விளக்கம் கேட்டார்.

கோலியின் கோபம்
அம்பயர் அவரை தொடர்ந்து பந்துவீசுமாறு கூறினாரே ஒழிய, நோ பாலை திரும்பப் பெறவில்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கேப்டன் கோலி செம கடுப்பானார். வேகமாக அம்பயர் அருகே வந்தார்.

வாக்குவாதம் இல்லை?
ஆனால், எதுவும் பேசவில்லை. அவர் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது என்றாலும், அம்பயரிடம் வாக்குவாதம் செய்யவில்லை. இது சில ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. ஆனால், கோலி இப்படி செய்ததற்கும் ஒரு காரணம் உள்ளது.

கடைசி பந்து
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் 7 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில், லசித் மலிங்கா வீசிய நோ பாலை அம்பயர்கள் கண்டுகொள்ளாமல், போட்டியை முடித்தனர். அப்போது கோபமடைந்து, ரெப்ரீயுடன் சண்டை போட்டார் கோலி. அதனால், அவருக்கு கெட்ட பெயர் தான் ஏற்பட்டது.

தோனி எல்லைமீறல்
அதே போல, தோனி, நோ பால் கொடுத்து விட்டு அதில் இருந்து அம்பயர் பின்வாங்கிய போது, களத்துக்கு சென்று எல்லை மீறி வாக்குவாதம் செய்தார். அவருக்கும் கெட்ட பெயர் தான் கிடைத்தது. இதை எல்லாம், மனதில் வைத்தோ, என்னவோ, கோலி அம்பயர் அருகே வரை சென்றுவிட்டு திரும்பிவிட்டார்.


Click it and Unblock the Notifications