சிக்கலில் டெல்லி
லீக் சுற்றில் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரபாடா இல்லாமல் பிளே-ஆஃப் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணி சிரமத்துக்கு உள்ளாகும் என கருதப்படுகிறது. பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் ஆலோசகர் கங்குலி என்ன செய்யப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதுகில் வலி
ஐபிஎல் தொடரில் ரபாடா சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கு முன்னதாக அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டு, அந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. ஐபிஎல் தொடரை அடுத்து உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால், பரபரப்படைந்தது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டு.
எதிர்பார்ப்பு
ரபாடா காயம் குறித்த மருத்துவ அறிக்கைகளை டெல்லி அணியிடம் இருந்து பெற்று, அவரை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு இன்னும் ஒரீரு போட்டிகள் மட்டுமே இருப்பதால், ரபாடாவை முக்கிய போட்டிகளில் மட்டும் பங்கேற்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
விலகல் முடிவு
எனினும், அவருக்கு முதுகில் ஏற்பட்டுள்ள உள்காயத்தின் தன்மையை ஆராய்ந்து, அவரை ஐபிஎல் தொடரில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இருக்கிறது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு. உலகக்கோப்பைக்கு முன் அவர் குணமாக வேண்டும் என்ற நோக்கிலும், காயத்தை மேலும் சிக்கலாக மாற்றிக் கொள்ளக் கூடாது என்று கருதியும் இந்த முடிவை எடுத்துள்ளது.
மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள்
டெல்லி அணியில் ரபாடா தவிர்த்து, அவருக்கு இணையாக சர்வதேச அனுபவம் வாய்ந்த மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இஷாந்த் சர்மா, கீமோ பால், ட்ரென்ட் பவுல்ட்.
இஷாந்த் சரியில்லை
இவர்களில் இஷாந்த் சர்மா ரன்கள் கொடுப்பதில் சிக்கனம் காட்டினாலும், விக்கெட்கள் வீழ்த்துவதில்லை. இவர் ஏற்கனவே, பெரும்பாலான போட்டிகளில் ரபாடாவுடன் இடம் பெற்று இருந்தார். எனவே, இவரை ரபாடாவுக்கு மாற்று வீரராக கருத முடியாது.
கீமோ பால், பவுல்ட் எப்படி?
கீமோ பால், டிரென்ட் பவுல்ட் - இருவரில் பவுல்ட் பந்தை அற்புதமாக ஸ்விங் செய்யும் வித்தை அறிந்தவர். ஆனால், இந்திய ஆடுகளங்களில் அவரது வித்தை வேலை செய்வதில்லை. மேலும், அவர் பங்கேற்ற இரு போட்டிகளிலும் ரன்னை வாரி இறைத்திருக்கிறார். கீமோ பால் தான் ஆடிய 5 போட்டிகளில் மிகவும் சராசரியாக பந்து வீசினார்.
மாற்று வீரர்
இதனால், டெல்லி அணி சிக்கலில் ஆழ்ந்துள்ளது. அனுபவமிக்க முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், கங்குலி, இருவரும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன் ரபாடா போன்ற திறமையான வேகப் பந்துவீச்சாளருக்கு மாற்று வீரரை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.