
2008 துவக்கம்
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏற்கனவே கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்கள் உள்ளூர் தொடர்களாக வெற்றிகரமாக நடந்து வந்தது. அணிகளை பல்வேறு உரிமையாளர்கள் நிர்வகிக்க, அந்த விளையாட்டு தொடர் நடத்தப்படும். அதே பாணியில் கிரிக்கெட்டில் ஐபிஎல் என்ற தொடரை துவங்கலாம் என யோசனை கூறி துவக்கி வைத்தார் அப்போதைய பிசிசிஐ நிர்வாகி லலித் மோடி.

அதிரடி துவக்கம்
இந்த நூற்றாண்டில் கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றை மாற்றி அமைத்த நாள் என்றால் அது 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட நாள் தான். அதுவரை கிரிக்கெட் உலகம் காணாத அளவுக்கு டான்ஸ், வான வேடிக்கை ஆகியவற்றுக்கு நடுவே துவங்கியது ஐபிஎல் தொடர்.

மெக்குல்லம் சதம்
முதல் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியின் பிரெண்டன் மெக்குல்லம் 73 பந்துகளில் 158 ரன்கள் குவித்து ஐபிஎல் என்றால் இதுதான் என உலகுக்கு ஒரு சாம்பிள் காட்டினார். இந்த துவக்க விழா மற்றும் சதம் ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம் ஆகும்.

தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடர்
ஐபிஎல் தொடங்கிய அடுத்த ஆண்டான 2009இல் இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. தேர்தல் பிரச்சாரம் மற்றும் ஓட்டுப் பதிவு தேதிகளில் ஐபிஎல் போட்டிகள் நடப்பதாக இருந்தது. அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இப்படி நாட்டையே மாற்றி ஒரு பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரை நடத்தியது மற்றொரு மறக்க முடியாத வரலாற்று சம்பவம்.

மேட்ச் பிக்ஸிங் புகார்
கிரிக்கெட்டை பிடித்த சாபக்கேடான மேட்ச் பிக்ஸிங் ஐபிஎல்-ஐயும் விட்டு வைக்கவில்லை. 2013இல் மூன்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் பிக்ஸிங் புகாரில் கைது செய்யப்பட்டார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ சேர்ந்த குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டனர்.

அணிகள் தடை
இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையாக 2016, 2017 ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தடை செய்யப்பட்டன. மேட்ச் பிக்ஸிங் புகார் காரணமாக அணிகளை தடை செய்தது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுவும் ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம் ஆகும்.

கோடிகளில் பணம்
ஐபிஎல் தொடரில் பணம் தான் பிரதானம். பங்கேற்கும் வீரர்கள் கோடிகளில் குளிப்பார்கள். அணிகளுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் வரும். ஆனால், அதை விட பிசிசிஐ சுமார் 3000 கோடி வரை லாபம் ஈட்டும். ஐபிஎல் தொடரின் வரவுக்கு பின் கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத கிரிக்கெட் அமைப்பாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கே சவால் விடும் அமைப்பாக மாறியது.

தொலைக்காட்சி டீல்
குறிப்பாக, 2017ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப 2.5 பில்லியன் டாலர்கள் கொடுத்தது. அதுதான் ஐபிஎல் தொடரின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியது. அதை அடுத்து தான் விளம்பரதாரர்களும் முன்பை விட பல மடங்கு வாரிக் கொடுக்கத் துவங்கினர்.

முன்னணியில் ஐபிஎல்
அதன் விளைவாக ஐபிஎல் தொடர் தற்போது பிரபல கால்பந்து தொடர்கள் மற்றும் அமெரிக்காவின் கூடைப்பந்து தொடரான என்பிஏ ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இந்த ஒளிபரப்பு ஒப்பந்தம் முக்கிய இடத்தை பெறுகிறது.

கொரோனா வைரஸ் தடை
இதை அடுத்து 2020 ஐபிஎல் தொடருக்கு பெரிய தடை விதித்துள்ளது கொரோனா வைரஸ். பல தடைகளை உடைத்து எறிந்த பிசிசிஐ அமைப்பால், இந்த வைரஸ் பிரச்சனையை சமாளிக்க முடியவில்லை. 2020 ஐபிஎல் தொடர் அடுத்த அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்காமலும் போகலாம். இந்த கொரோனா வைரஸ் தடையும் ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம் ஆகும்.


Click it and Unblock the Notifications