2 வீரர்கள் பாசிட்டிவ்
சென்னை வீரர்கள் தீபக் சஹார் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்குத்தான் பாசிட்டிவ் என முதலில் தெரியவந்தது. பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் டெஸ்ட் எடுத்துப் பார்க்கப்பட்டது. அதில் அனைவருக்குமே நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாம்.
அனைவரும் நெகட்டிவ்
நேற்று இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையில் யாருக்குமே பாசிட்டிவ் ரிசல்ட் வரவில்லை. இதனால் ஒட்டுமொத்த அணி நிர்வாகமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. வீரர்களும் கூட நிம்மதியடைந்துள்ளனராம். மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் நிர்வாகமும் கூட நிம்மதி அடைந்துள்ளது. போட்டிக்கு பெரும் இடையூறாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருந்தது.
மீண்டும் 3ம் தேதி டெஸ்ட்
தற்போதைய நெகட்டிவ் ரிசல்ட்டால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சென்னை அணியின் வீரர்கள், பிற பணியாளர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 3ம் தேதி மீண்டும் ஒரு டெஸ்ட் எடுக்கப்படவுள்ளது. அதிலும் அவர்களுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வரப் பெற்றால் செப்டம்பர் 5ம் தேதி முதல் மைதானத்தில் பயிற்சிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.
தனிமையில் 2 பேர்
இதற்கிடையே பாசிட்டிவ் என முதலில் கண்டறியப்பட்ட சஹார் மற்றும் ருதுராஜ் ஆகிய இருவரும் செப்டம்பர் 12ம் தேதி வரை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். அவர்கள் பயிற்சியில் ஈடுபட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்து அணியில் இணைந்துள்ள பாப் டு பிளசிஸ் மற்றும் லுங்கி அங்கிடி ஆகிய இருவரும் நேரடியாக தனிமைப்படுத்தப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர் வருவாரா
மறுபக்கம் சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் தனது பயணத்தை மீண்டும் தள்ளிப் போட்டுள்ளார். அவர் வருவாரா அல்லது போட்டியில் பங்கேற்காமல் விலகிக் கொள்வாரா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அவர் மீது சென்னை அணி பெரும் நம்பிக்கையுடன் உள்ளது. காரணம் எமிரேட்ஸ் மைதானங்கள் ஸ்பின்னுக்கு ஏற்றவையாகும். எனவே ஹர்பஜன் வருகையை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.