
பிசிசிஐ திட்டம்
இந்த ஆண்டு மகளிர் ஐபிஎல் தொடரை சிறிய அளவில் நடத்தலாம் என பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து திட்டங்களும் மாறியது. முதலில் முக்கியமான ஐபிஎல் தொடரை நடத்த களமிறங்கியது பிசிசிஐ.

மகளிர் டி20 சேலஞ்ச்
ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் வெற்றிகரமாக பாதி போட்டிகள் முடிந்துள்ளது. இந்த நிலையில், மகளிர் ஐபிஎல் இல்லாவிட்டாலும், கடந்த ஆண்டைப் போல மகளிர் டி20 சேலஞ்ச் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

மூன்று அணிகள்
கடந்த ஆண்டு மோதிய அதே மூன்று அணிகள் இந்த ஆண்டும் மோதுகின்றன. சூப்பர்நோவா, ட்ரெயில்பிளைசர்ஸ், வெலாசிட்டி என்ற மூன்று அணிகள் முதலில் மூன்று லீக் போட்டிகளில் மோத உள்ளன. அதிக வெற்றிகள் பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

கேப்டன்கள் யார்?
மூன்று லீக் போட்டிகள், ஒரு இறுதிப் போட்டி என மொத்தம் நான்கே போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த மூன்று அணிகளுக்கு கேப்டன்களாக ஹர்மன்பரீத் கவுர் - சூப்பர்நோவா, ஸ்மிருதி மந்தனா - ட்ரெயில்பிளைசர்ஸ், மிதாலி ராஜ் - வெலாசிட்டி செயல்பட உள்ளனர்.

போட்டி தேதிகள்
ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறும் போது இடைவெளி நாட்களில் மகளிர் டி20 சேலஞ்ச் போட்டிகள் நடைபெறும். நவம்பர் 4, 5, 7 தேதிகளில் மூன்று லீக் போட்டிகளும், நவம்பர் 9 அன்று இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது.

வெளிநாட்டு வீராங்கனைகள்
இந்தப் போட்டிகளில் இந்திய மகளிர் வீராங்கனைகள் மட்டுமின்றி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். தாய்லாந்து நாட்டை சேர்ந்த நட்ஹக்கன் சாந்தம் என்ற ஒரு வீராங்கனையும் பங்கேற்க உள்ளார்.


Click it and Unblock the Notifications