
அந்தரத்தில் ஐபிஎல் போட்டிகள்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் 2020 தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொடர் இந்த ஆண்டிலேயே அதுவும் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். ஆயினும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் இந்த தொடர் துபாயில் நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐசிசி முடிவுக்காக காத்திருப்பு
இந்நிலையில் ஐபிஎல் 2020, தேசிய அளவிலான பயிற்சி முகாம் மற்றும் உள்ளூர் போட்டிகளை துவக்குவது உள்ளிட்டவை குறித்து தீர்மானிக்க பிசிசிஐயின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் இவை குறித்த எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை. மாறாக டி20 உலக கோப்பை குறித்து ஐசிசியின் முடிவுக்காக காத்திருப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முடிவை தாமதப்படுத்தும் ஐசிசி
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடரை நடத்த முடியாது சூழல் நிலவிவரும் நிலையில், அதுகுறித்து முக்கிய முடிவை எடுக்காமல் ஐசிசி தாமதப்படுத்தி வருகிறது. இதனால் அந்த அட்டவணையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்ற பிசிசிஐயின் முடிவும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் மத்திய சுகாதாரத்துறையின் அனுமதிக்காகவும் பிசிசிஐ காத்திருக்கிறது.

முடிவெடுக்காத பிசிசிஐ
நேற்று நடத்தப்பட்ட பிசிசிஐயின் கூட்டத்தில் வீட்டில் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்த திட்டமிடப்பட்ட தேசிய அளவிலான பயிற்சி முகாம் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படவில்லை. முதலில் பெங்களூரு, பின்பு தர்மசாலா, அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் நடத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக முகாம்களை நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

முடிவுகள் தள்ளிவைப்பு
கடந்த மார்ச் மாதத்திலிருந்து 4 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ள நிலையில், முதலில் உள்ளூர் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. இந்த கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்தும் முடிவெடுக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications