ஐபிஎல் கதி இதுதான்
தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர், அடுத்து வரும் நாட்களில் நடக்க வாய்ப்பே இல்லை. ஒருவேளை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து, அதன் பரவும் வேகம் முற்றிலும் நின்றால் மட்டுமே ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்கு கொரோனா வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 2,76,000 பேருக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,421 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
இந்தியா நிலை
இந்தியாவில் மட்டும் 275 பேர் வரை பாதிக்கபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் பலர் பாதிக்கப்படுள்ளனர். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா பரவினால் அதன் தாக்கம் கொடுமையாக இருக்கும் என்ற அச்சம் உள்ளது.
மூன்றாம் கட்டம்
தற்போது இந்தியாவில் கொரோனா பரவும் விதம் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. அதாவது, வெளிநாட்டில் இருந்து வந்தோர் மற்றும் அவர்களை தொடர்பு கொண்டோர், அவர்களின் உறவினர், நண்பர்களுக்கு மட்டுமே பரவி வருகிறது. இதைத் தாண்டி அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத, அவர்களை அணுகாதவர்களுக்கும் கொரோனா பரவினால் அது மூன்றாம் கட்டம் ஆகும்.
பீதியில் மக்கள்
இந்தியாவில் கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுப் போக்குவரத்து பெரும்பாலும் குறைந்துள்ளது. மக்கள் இடையே லேசான பீதி நிலவி வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரை எல்லாம் மக்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள் என்பதே உண்மை.
ஐபிஎல் தள்ளி வைப்பு
கொரோனா இந்தியாவில் பரவத் துவங்கிய நிலையிலேயே ஐபிஎல் தொடரை தற்காலிகமாக தள்ளி வைத்தது பிசிசிஐ. மார்ச் 29 அன்று துவங்க இருந்த ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எப்போது ஐபிஎல் தொடர் நடக்கும் என்பது யாருக்கும் தெரியாத மர்மமாக உள்ளது.
கவலையில் பிசிசிஐ
தினமும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பிசிசிஐ கவலையில் ஆழ்ந்துள்ளது. ஏற்கனவே, இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை பாதியில் ரத்து செய்த பிசிசிஐ, ஐபிஎல் தொடர் ரத்தானால் பெரிய நஷ்டம் ஆகும் என்ற கவலையில் உள்ளது.
சில திட்டங்கள்
ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ சில திட்டங்களை வைத்துள்ளது, மே 5க்குள் கொரோனா தாக்கம் குறைந்தால் போட்டிகளை பாதியாக குறைத்து ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் போட்டிகளை நடத்த ஒரு திட்டம் உள்ளது. அல்லது ஆகஸ்ட் - செப்டம்பரில் தொடரை நடத்த மற்றொரு திட்டம் உள்ளது.
ஐபிஎல் கூட்டம்
இந்த நிலையில் இது குறித்து விவாதிக்க பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகிகள் மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் வரும் செவ்வாய் அன்று நடைபெற உள்ளது. அதில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
இடம் இல்லை
ஆனால், இந்த கூட்டத்தை நடத்த இடம் இல்லை என்பது தான் வேடிக்கை. பிசிசிஐ அலுவலகம் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ளது. அரசு கட்டுப்பாடு இருப்பதால் ஹோட்டல்களிலும் கூட்டம் நடத்த முடியாது. அதனால், தொலைபேசியில் கான்பரன்ஸ் காலில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
வாய்ப்பே இல்லை
ஐபிஎல் கூட்டம் நடத்தவே இடம் இல்லையே.. இவர்கள் ஐபிஎல் போட்டிகளை எப்படி நடத்தப் போகிறார்கள்? என்பதே சாமானிய ரசிகனின் கேள்வி. ஏதாவது பெரிய மாற்றம் (மேஜிக்) நடந்தால் ஒழிய ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பே இல்லை என்பது தான் நிதர்சனம்.