
2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க இருந்தது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வந்தது. அப்போது மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க இந்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதனால், ஐபிஎல் தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

தள்ளி வைத்தது
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பரவி வந்ததால் ஏப்ரல் 15 வரை ஐபிஎல் தொடர் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் 15 வரை வெளிநாட்டு வீரர்களுக்கு இந்தியா வர விசா கிடைக்காது என்பதும் இந்த தள்ளி வைப்புக்கு முக்கிய காரணம்.

21 நாட்கள் லாக்டவுன்
பிசிசிஐ, ஐபிஎல் தொடரை தள்ளி வைத்த பின் இந்திய அரசு 21 நாட்கள் லாக்டவுன் அறிவித்தது. அதன்படி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. லாக்டவுன் நீட்டிக்கப்படும் என கூறப்பட்டதால் ஐபிஎல் தொடர் நடப்பதிலும் சந்தேகம் எழுந்தது.

மே 3 வரை மீண்டும் லாக்டவுன்
இந்த நிலையில், மக்கள் அனைவரும் எதிர்பார்த்தது போலவே இந்தியாவில் மே 3 வரை மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது. அதனால், அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

ஐபிஎல் ரத்து?
2020 ஐபிஎல் தொடரும் இந்த காலகட்டத்தில் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மே 3க்கு பின்பும் இந்தியாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என கூறப்படுவதால், ஐபிஎல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், பிசிசிஐ அதிரடி முடிவு எடுத்துள்ளது.

கால வரையின்றி தள்ளிவைப்பு
ஐபிஎல் தொடரை கால வரையின்றி தள்ளி வைக்கும் முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ. மேலும், தாங்கள் ஐபிஎல் தொடரை ரத்து செய்யவில்லை, தள்ளி மட்டுமே வைத்துள்ளோம் என எட்டு ஐபிஎல் அணிகளுக்கும், ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் உறுதிபட கூறி உள்ளது.

அறிவிப்பு வரவில்லை
நேற்று மத்திய அரசு லாக்டவுன் நீட்டிப்பை வெளியிட்ட போதே, பிசிசிஐ ஐபிஎல் குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிசிசிஐ இதுவரை 2020 ஐபிஎல் குறித்து அதிகாரப்பூர்வமாக ஊடகங்களுக்கு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ரகசிய தகவல்
ஆனால், ரகசியமாக ஐபிஎல் அணிகள் மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு மட்டும் இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஒரு ஐபிஎல் அணியின் மூலம் இந்த தகவல் வெளியே கசிந்துள்ளது. நிலைமை சீராகும் வரை ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பே இல்லை என தெரிகிறது.

டி20 உலகக்கோப்பை தொடர்
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முயற்சி செய்யும் என தெரிகிறது. ஆனால், அது சாத்தியமா? என்ற சந்தேகமும் உள்ளது. ஆகஸ்ட் - செப்டம்பர் கால கட்டத்தில் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் நடைபெற உள்ளன.


Click it and Unblock the Notifications