
2020 ஐபிஎல் ஏற்பாடு
2020 ஐபிஎல் தொடர் நடத்த பிசிசிஐ அனைத்து ஏற்பாடுகளையும் கடந்த மார்ச் முதல் வாரம் வரை செய்து வந்தது. அதே நேரத்தில் உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவத் துவங்கியது. அதனால், கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் தடைபட்டன.

இந்தியாவில் பாதிப்பு
இந்தியா - தென்னாப்பிரிக்கா சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் மார்ச் இரண்டாம் வாரத்தில் நடைபெற இருந்தது. அந்த தொடரும் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் பற்றிய கேள்வி எழுந்தது.

ஐபிஎல் தள்ளி வைப்பு
பின்னர் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் பட்சத்தில் ஏப்ரல் 15க்குப் பின் ஐபிஎல் நடத்தக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் நிலைமை மோசமாக மாறியது.

லாக்டவுன் அறிவிப்பு
இந்த நிலையில், இந்தியாவில் ஏப்ரல் 15 வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. மக்கள் வீட்டுக்கு வெளியே செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை அடுத்து பிசிசிஐ தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தியது. அதனால், ஐபிஎல் தொடர் கேள்விக் குறியானது.

லாக்டவுன் நீட்டிப்பு
ஏப்ரல் 15க்கு பின் மத்திய அரசு மீண்டும் லாக்டவுன் நீட்டிப்பை அறிவித்துள்ளது. அதனால், இந்தியாவில் ஐபிஎல் குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. மேலும், வெளிநாட்டு வீரர்களும் இந்தியா வர வாய்ப்பு இல்லை.

பிசிசிஐ முடிவு
அதனால், பிசிசிஐ ஐபிஎல் தொடரை தள்ளி வைக்கும் முடிவை எடுத்துள்ளது. அதிலும், இந்த முறை தேதி எதுவும் அறிவிக்காமல், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஐபிஎல் தொடரை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. அதனால், அடுத்த சில மாதங்களில் ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

காரணம் என்ன?
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் மற்றும் அதன் காரணமாக இந்தியா அறிவித்துள்ள லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக பிசிசிஐ, ஐபிஎல் தொடரை தள்ளி வைத்துள்ளதாக விளக்கம் கூறி உள்ளது.

இந்தியாவில் அதிகரித்த பாதிப்பு
இந்தியாவில் கடந்த சில நாட்களில் பல ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 10,000க்கும் அதிகமாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. இந்த பாதிப்பு முற்றிலும் குறைய இன்னும் பல மாதங்கள் ஆகலாம்.

இலங்கை அழைப்பு
அதனால், இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் ஐபிஎல் தொடரை, ரசிகர்கள் இல்லாத நிலையில் நடத்துவது கூட சாத்தியமில்லை என கருதப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள இலங்கை, ஐபிஎல் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications