
2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கால வரை இன்றி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. மூன்றாவது நான்காம் கட்ட லாக்டவுனில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை விரைவில் நடத்தலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது பிசிசிஐ.

5000 கோடி வரை நஷ்டம்
ஐபிஎல் தொடரை ரத்து செய்தால் சுமார் 5000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்பதால் அந்த தொடரை அக்டோபர் மாதம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது. அது பற்றி சமீபத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி மாநில கிரிக்கெட் அமைப்புகளுக்கு எழுதிய கடிதம் கசிந்தது.

எப்போது ஐபிஎல்?
தொடர்ந்து ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்த ஆயத்தமாகி உள்ளதாகவும், ஐபிஎல் சம்பந்தப்பட்ட பலரும் தொடர் நடக்க வேண்டும் என ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், இந்த தொடர் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகும். வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க வேண்டும் தான். ஆனால், இந்திய வீரர்களை மட்டுமே வைத்து தொடரை நடத்த முடியாது என கூற முடியாது என பூடகமாக பேசி இருந்தார்.

குழப்பம்
இந்த விஷயம் தான் ஐபிஎல் அணிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. ஐபிஎல் தொடரின் சிறப்பே வெளிநாட்டு வீரர்கள் தான் என கருதும் ஐபிஎல் அணிகள் இது பற்றி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன.

சீக்கிரம் சொல்ல வேண்டும்
மேலும், விரைவாக ஐபிஎல் எப்போதும், எங்கே நடக்கும் என்பது பற்றி கூறினால் தான் தங்களால் விளம்பரதாரர்களை பிடிக்க முடியும் எனவும் சில அணிகள் கூறி உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு அக்டோபர் மாதம் எப்படி இருக்கும் என தெரியாத நிலையில், பிசிசிஐ எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளது.


Click it and Unblock the Notifications