
2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடக்க உள்ள நீண்ட டி20 தொடர் என்பதால் பிசிசிஐ அதற்காக பல விதிமுறைகளை வகுத்து இருந்தது. ஒவ்வொரு அணியும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அதைத் தாண்டி வெளி நபர்கள் யாரும் தொடர்பில் வராமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தி இருந்தது.

13 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த இரண்டு வீரர்கள் தீபக் சாஹர் மற்றும் ருதுராஜ் கெயிக்வாட் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் வலம் வருகிறது.

கேள்விகள்
அந்த இரண்டு வீரர்களுக்கு தான் பாதிப்பா? சிஎஸ்கே அணியின் அடுத்த திட்டம் என்ன? பிசிசிஐ எப்படி இதை அணுக உள்ளது? என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகுமா? என ரசிகர்கள் உட்பட அனைவரும் காத்திருந்தனர்.

பிசிசிஐ அறிக்கை
இந்த நிலையில் ஒரு நாள் தாமதமாக பிசிசிஐ இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வந்து சேர்ந்தது முதல் அனைத்து உறுப்பினர்களும் கட்டாய பரிசோதனை மற்றும் குவாரன்டைன் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.

1988 ஆர்டி-பிசிஆர் பரிசோதனை
மேலும், ஆகஸ்ட் 20 முதல் 28 வரை உள்ள காலகட்டத்தில் 1988 ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதி வீரர்கள், அணி உதவியாளர்கள், அணி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள், பிசிசிஐ பணியாளர்கள், ஐபிஎல் செயற்குழு, ஹோட்டல், மைதானம் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் என அனைவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை.

மருத்துவ குழு கண்காணிப்பு
இதில் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அவர்களும், அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களும் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறி உள்ளது. அவர்களை ஐபிஎல் மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும் கூறி உள்ளது.

பெயர் சொல்லாத பிசிசிஐ
இந்த அறிக்கையில் ஒரு இடத்தில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது அந்த இரு வீரர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்கள் யார் என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. அனைவரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாத இந்த அறிக்கை எதற்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுரேஷ் ரெய்னா விலகல்
இதற்கிடையே சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதும், இந்தியா திரும்பியதும் பல கேள்விகளை எழுப்பியது. அதன் உண்மையான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. அவரது அத்தை வீட்டில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர். அவரது மாமா அதில் பலியாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications