
2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் மார்க் 29 அன்று துவங்க வேண்டியது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அந்த தொடர் அப்போது ஏப்ரல் 15க்கு தள்ளி வைக்கப்பட்டது. பின் நிலைமை மோசமானதை அடுத்து கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது.

தொடரை நடத்த முடிவு
ஆனால், தற்போது அனைத்து தொழில்களையும் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் மீண்டும் நடத்த அனுமதி அளித்து உள்ளது மத்திய அரசு. இந்த நிலையில் பிசிசிஐ-யும் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நஷ்டம் தான்.

5000 கோடிக்கும் மேல் நஷ்டம்
ஐபிஎல் தொடர் நடக்காமல் போனால் பிசிசிஐ மட்டுமின்றி அதை சார்ந்து உள்ள பல்வேறு தரப்பினருக்கு மொத்தமாக 5000 கோடிக்கும் மேல் நஷ்டம் ஆகும் என கூறப்படுகிறது. அந்த நஷ்டத்தை தவிர்க்கவே ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

டி20 உலகக்கோப்பை
அக்டோபரில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக்கோப்பை நடக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னரே பிசிசிஐ ஐபிஎல் தொடரை அதே காலகட்டத்தில் நடத்த உள்ளது. அது குறித்து பிரிஜேஷ் பட்டேல் பேசினார்.

ஐபிஎல் அட்டவணை
பிரிஜேஷ் பட்டேல் கூறுகையில், டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் அட்டவணையை தயார் செய்ய முடியாது. எனவே, எப்போது வேண்டுமானாலும் நாங்கள் வேலையை துவக்கலாம் என்றார்.

யோசிக்க மாட்டோம்
மேலும், அடுத்த ஒரு மாதம் கொரோனா வைரஸ் குறித்து என்ன நடக்கிறது என பார்ப்போம். ஐபிஎல் தொடரை பகுதியாகவோ, முழுமையாகவோ வேறு நாட்டிற்கு மாற்றுவது பற்றியும் நாங்கள் தயங்கி, யோசிக்க மாட்டோம். அக்டோபரில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் யாருக்கு தெரியும் என்றார்.

தொலைக்காட்சிக்கு மட்டுமே
அடுத்ததாக, ஐபிஎல் இந்தியாவில் நடந்தாலும், வெளிநாட்டில் நடந்தாலும் இரண்டு அல்லது மூன்று இடங்களுக்கு மேல் நடக்காது. ஏனெனில், இது தொலைக்காட்சிக்கு மட்டுமே. மேலும், காலி மைதானத்தில் தான் ஐபிஎல் நடக்கும் என உறுதியாக கூறினார் பிரிஜேஷ் பட்டேல்.

இரண்டு நாடுகள் அழைப்பு
எப்படியாவது ஐபிஎல்-ஐ நடத்த பிசிசிஐ உறுதியாக இருப்பது தெரிகிறது. ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அமைப்புகள் தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











