இந்தியா -ஆஸ்திரேலியா தொடருக்கு சிறந்த பயிற்சியை ஐபிஎல் கொடுக்கும்... இயான் சாப்பல் நம்பிக்கை
சிட்னி : வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இந்தியா -ஆஸ்திரேலியா தொடருக்கு தற்போதைய ஐபிஎல் போட்டிகள் சிறந்த பயிற்சியை கொடுக்கும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சாப்பல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளை முடித்துக் கொண்டு நேரிடையாக ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி, அங்கு குவாரன்டைனை முடித்துக் கொண்டு டிசம்பர் மாத துவக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களில் மோதவுள்ளது.
ஆஸ்திரேலியாவுடன் ஒரு பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணியினர் மோதவுள்ளனர்.

நேரிடையாக ஆஸி செல்லும் இந்திய வீரர்கள்
தொடர்ந்து 5 மாதங்களாக எந்தவித போட்டிகளிலும் பங்கேற்காத இந்திய அணியினர், தற்போது ஐபிஎல் போட்டிகளில் மோதி விளையாடவுள்ளனர். இதையடுத்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் மோதவுள்ளனர். இதற்கென ஐபிஎல் போட்டிகளை முடித்துக் கொண்டு நேரிடையாக ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளை மிஸ் செய்யும் ஆஸி வீரர்கள்
ஐபிஎல் போட்டிகளுக்காக இந்திய அணியினர் மட்டுமின்றி மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணி வீரர்களும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். இதையடுத்து ஐபிஎல்லின் ஆரம்ப போட்டிகள் சிலவற்றை இவர்கள் மிஸ் செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் கொடுக்கும்
இந்நிலையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் மிகச்சிறந்த சவாலான பயிற்சியை அளிக்கும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சாப்பல் தெரிவித்துள்ளார். ஆயினும் தற்போதைய வித்தியாசமான கொரோனா சூழலில் இந்த பயிற்சி மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பாக விளையாடுவார்கள்
ஆயினும் இந்தியா -ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் ஆயினும் எந்த சூழலுக்கும் தங்களை மாற்றிக் கொள்ளும் திறமை இந்திய அணியினரிடம் உள்ளதாகவும் சாப்பல் குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடாமல் அவர்கள் திரும்ப மாட்டார்கள் என்றும் சாப்பல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications