
சிஎஸ்கே நிலை
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் தன் முதல் நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகளை சந்தித்தது. சரியான அணி இல்லை என்ற விமர்சனத்துக்கு தீர்வு கண்ட பின்னும் நான்காவது போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து இருந்தது.

அதிரடி வெற்றி
இந்த நிலையில், ஐந்தாவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆடிய சிஎஸ்கே அணி 179 ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றது. அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. எப்படி இந்த அதிரடி மாற்றம்?

பின்னணியில் பிளெம்மிங்
இந்த பின்னணியில் பயிற்சியாளர் பிளெம்மிங் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர் தோல்விகளால் கோபம் கொண்ட அவர் சிஎஸ்கே வீரர்களை காய்ச்சி எடுத்துள்ளார். அணியில் சில பலவீனங்கள் இருக்கும் நிலையில் என்ன செய்தால் வெற்றி பெறலாம் என அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

பிளெம்மிங் திட்டம் என்ன?
மற்ற அணிகளில் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை குவிக்கிறார்கள். அவர்களை சுற்றியே மிடில் ஆர்டர் செயல்படுகிறது. எனவே, சிஎஸ்கே அணியின் முதல் மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வைத்து பலவீனத்தை மறைக்க முடிவு செய்தார்.

உண்மையான பலவீனம்
சிஎஸ்கே அணியின் பெரிய பலவீனம் மிடில் ஆர்டர் தான். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மிடில் ஆர்டர் வீரர்கள் அதிகமாக பேட்டிங் செய்ய வேண்டியது இருக்காது. அதிக பந்துகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது.

மூன்று வீரர்கள்
சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஷேன் வாட்சன், பாப் டுபிளெசிஸ், அம்பதி ராயுடு. பாப் டுபிளெசிஸ் ஏற்கனவே நல்ல பார்மில் இருக்கிறார். ராயுடு ஹைதராபாத் போட்டியில் விரைவில் ஆட்டமிழந்தார். வாட்சன் பார்ம் அவுட்டில் இருந்தார். இவர்கள் மூவருக்கும் விக்கெட் விழாமல் ஆட வேண்டும் என்ற தன் திட்டத்தை கூறி இருக்கிறார் பிளெம்மிங்.

விக்கெட் விழாமல் ஆடிய ரகசியம்
அதை ஷேன் வாட்சன் பஞ்சாப் போட்டிக்கு இரு நாட்கள் முன்பே தன் ட்விட்டர் பக்கத்தில் சூசகமாக கூறி இருந்தார். அதை அடுத்து போட்டியிலும் வாட்சன், பாப் டுபிளெசிஸ் விக்கெட் இழக்காமல் ஆடி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

எதிரணிகள் உஷார்
சிஎஸ்கே அணியின் இந்த திட்டம் எதிரணிகளுக்கு சவால் விடுத்தாலும், பஞ்சாப் போட்டிக்கு பின் உஷாராகவே இருப்பார்கள். முதல் மூன்று வீரர்களுக்கு குறி வைத்து வீழ்த்தினால் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பலவீனம் வெளிப்படும் என்பதே எதிரணிகள் திட்டமாக இருக்கும்.

தோனி, ஜாதவ்
மிடில் ஆர்டர் ஜடேஜா, சாம் கர்ரன் போன்றோர் சிறப்பாகவே ஆடுகின்றனர். ஆனால் ஜாதவ் நிலை படுமோசமாக உள்ளது. தோனி ரன் எடுத்தாலும், முதல் சில பந்துகளில் திணறுகிறார். நிறைய டாட் பால் ஆடுகிறார். இது தான் தோல்வி அடைந்த போட்டிகளில் சிக்கலை ஏற்படுத்தியது.

தோனி ஆட்டம்
எனவே, தோனி, கேதர் ஜாதவ் தங்கள் ஆட்டத்தை மாற்றினால் சிஎஸ்கே அணி அசைக்க முடியாத அணியாக இந்த ஐபிஎல் தொடரிலும் வலம் வரும். டாப் ஆர்டர் சில போட்டிகளில் சொதப்பினாலும், மிடில் ஆர்டர் கை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications