துபாய் சென்ற சிஎஸ்கே
2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக எட்டு ஐபிஎல் அணிகளும் இந்தியாவில் இருந்து கிளம்பி துபாய் மற்றும் அபுதாபியில் முகாமிட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் துபாயில் ஒரு ஹோட்டலில் முகாமிட்டுள்ளது.
செப்டம்பர் 1 வரை..
சென்னை சூப்பர் கிங்ஸ் தவிர மற்ற ஐபிஎல் அணிகள் ஒரு வார குவாரன்டைன் முடிந்து பயிற்சியை துவக்கி விட்டன. சிஎஸ்கே அணி மட்டும் செப்டம்பர் 1 வரை குவாரன்டைனில் இருக்கப் போவதாக சில மணி நேரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.
சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
அப்போதே சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது? ஏன் திடீரென திட்டத்தை மாற்றி குவாரன்டைன் நாட்களை அதிகரிக்க வேண்டும்? யாருக்கேனும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதா? கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏதும் தென்படுகிறதா? என்ற கேள்விகள் எழுந்தன.
13 பேருக்கு கொரோனா
இந்த நிலையில், சில செய்தி நிறுவனங்கள் சிஎஸ்கே அணியில் ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி ஆகி உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 12 உதவியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தனிமையில் சிஎஸ்கே வீரர்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அனைவரும் சீரான உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் ஹோட்டலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி வெளியாகும் நேரம் வரை இது குறித்து சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் கூறவில்லை.
மீண்டும் பரிசோதனை
தற்போது அனைத்து சிஎஸ்கே அணி வீரர்களும் துபாயில் தாங்கள் தங்கி உள்ள இடங்களிலேயே உள்ளனர். ஏழு நாட்களில் மூன்று பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில், சிஎஸ்கே அணியில் பாதிப்பு உறுதி ஆகி இருப்பதால் அனைவரும் வெள்ளிக்கிழமை அன்று நான்காவது பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.
யார் அந்த வேகப் பந்துவீச்சாளர்?
அந்த ஒரு சிஎஸ்கே வேகப் பந்துவீச்சாளர் யார்? என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. வேறு வீரர்கள் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதும் தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ இதுவரை இது பற்றி விளக்கம் அளிக்கவில்லை.
ஐபிஎல் அதிகாரிகள் சமாளிப்பு
ஐரோப்பாவில் கால்பந்து தொடர்கள் தொடங்கிய போது கூட சில அணிகளில் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. ஆனாலும், பின்னர் அவர்கள் உடல்நிலை சீராகி போட்டிகளில் பங்கேற்றார்கள். அதே போல தான் இதுவும் என ஐபிஎல் அதிகாரிகள் சிலர் இதை சமாளித்து கருத்து கூறி வருகின்றனர்.
சென்னை பயிற்சி
சிஎஸ்கே அணி துபாய் செல்லும் முன் ஆறு நாட்கள் சென்னையில் தங்கி பயிற்சி முகாமில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னரே துபாய் கிளம்பிச் சென்றது சிஎஸ்கே. அந்த விஷயமும் தற்போது விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.