சின்ன மைதானம்
இன்று சிஎஸ்கே விளையாடும் சார்ஜா மைதானம் மிகவும் சின்ன மைதானம் ஆகும். அளவில் சின்னதாக இருப்பதால் லேசாக தட்டிவிட்டாலே இங்கு சிக்ஸ் சென்றுவிடும். அதிலும் ஸ்பின் பவுலிங்கில் எல்லாம் கொஞ்சம் இறங்கி வந்து ஆடினால் எளிதாக சிக்ஸ் அடிக்க முடியும். சார்ஜா மைதானம் பவுலிங் செய்வதற்கு கொஞ்சமும் ஏற்ற மைதானம் கிடையாது.
பவுலிங்
பும்ரா, சாஹல் போன்ற பெரிய பெரிய பவுலர்கள் கூட சார்ஜா மைதனத்தில் 40+ரன்களை வாரி வழங்கி உள்ளனர். சார்ஜா மைதானத்தில் வெற்றிபெற வேண்டும் என்றால் வலுவான பேட்டிங் ஆர்டர் மட்டுமே தீர்வாக இருக்கும். இங்கு பவுலிங்கை நம்பிக் கொண்டு சென்று எதிரணியை 160 ரன்களில் சுருட்டலாம் என்று கனவு காண முடியாது. ஆனால் இங்குதான் சிஎஸ்கே வசமாக சிக்கி உள்ளது.
டெல்லி பவுலிங்
டெல்லி அணியின் பேட்டிங் ஆர்டர் மும்பையின் பேட்டிங் ஆர்டருக்கு இணையானது. ஓப்பனிங் தொடங்கி இறுதி வரை அதிரடியாக ஆட டெல்லி அணியில் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அதிலும் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், ஹெட்மயர், ஸ்டோனிஸ், ராபாடா என்று ஒரே ஓவரில் போட்டியை மாற்றும் திறமை கொண்டு வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஹிட்டர்கள்
டெல்லி அணியில் முழுக்க முழுக்க ஹிட்டர்கள் நிரம்பி வழிகிறார்கள். ஒரு பக்கம் பேட்டிங் சொதப்பினால் இன்னொரு பக்கம் பவுலிங் மூலம் கட்டுப்படுத்த கூடிய அணிதான் டெல்லி. டெல்லி அணியில் அக்சர் பட்டேல், ரபாடா, அஸ்வின், ஸ்டோய்னிஸ், நோர்ட்ஜ் என்று உலகின் டாப் பவுலர்கள் இருக்கிறார்கள். பேட்டிங்கில் சொதப்பினால் கூட அந்த அணி பவுலிங்கில் மொத்தமாக எதிரணியை காலி செய்துவிடும்.
இப்படி ஒரு அணி
இப்படி ஒரு அணியைதான் இன்று சிஎஸ்கே எதிர்கொள்ள போகிறது. அதிலும் இந்த போட்டி சார்ஜாவில் நடக்கிறது. இதனால் சிஎஸ்கே கண்டிப்பாக கூடுதல் பேட்ஸ்மேன்கள் உடன் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பவுலிங் எடுபடாது என்பதால் பேட்டிங்கில் வலிமையை சேர்க்க வேண்டும். கடந்த போட்டி போல 7 பவுலர்கள் உடன் சிஎஸ்கே களமிறங்கினால் வேலைக்கு ஆகாது.
சிஎஸ்கே
கடந்த போட்டியில் மிடில் ஆர்டரில் ஆட வேண்டிய ஜெகதீசன் சிஎஸ்கே அணியில் இடம்பெறவில்லை. மாறாக தோனி இரண்டு முழு நேர ஸ்பின் பவுலர் பார்முலாவை பயன்படுத்தினார். ஜெகதீசனுக்கு பதிலாக சாவ்லா அணியில் சேர்க்கப்பட்டார். கூடுதல் ஸ்பின் பவுலிங்கிற்காக சிஎஸ்கே இவரை இறக்கியது. ஆனால் இன்று நடக்கும் போட்டி பேட்டிங் பிட்ச் என்பதால் கூடுதலாக ஒரு நல்ல பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார். அப்போதுதான் மிடில் ஆர்டரில் வாட்சன், ராயுடு டென்ஷன் இல்லாமல் அதிரடியாக ஆட முடியும்.
டென்ஷன்
கடந்த போட்டியில் ஜெகதீசன் இல்லாத காரணத்தால் விக்கெட்டை இழக்க கூடாது என்று வாட்சன், ராயுடு மெதுவாக ஆடினார்கள். கூடுதல் பேட்ஸ்மேன் இருந்தால் இவர்கள் இருவரும் டென்ஷன் இல்லாமல் அதிரடி காட்ட முடியும். இதனால் இன்று போட்டியில் கண்டிப்பாக ஜெகதீசனை அணியில் எடுப்பதை தவிர வேறு வழியே இல்லை. தோனி அதே இரண்டு ஸ்பின் பவுலர் பார்முலாவோடு களமிறங்க கூடாது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது .