டாஸ்
2020 ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு போட்டிகள் நடந்துள்ளன. அதில் டாஸ் வென்ற அணிகள் தவறாமல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளன. சிஎஸ்கே அணி இரண்டு முறை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆனாலும், ஆறு முறையில், ஐந்து முறை டாஸ் வென்ற அணிகள் தோல்வி அடைந்துள்ளன.
ஏன் பந்துவீச்சு?
அதற்கு முக்கிய காரணம் டாஸ் வென்ற அணிகள் அனைத்துமே பந்துவீச்சை தேர்வு செய்தது தான். போட்டி நடக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தில் பனிப் பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் துல்லியமாக பந்து வீச முடியாது. அதன் காரணமாகவே அனைத்து அணிகளும் பந்துவீச்சை தேர்வு செய்கின்றன.
ஆனாலும் தோல்வி
ஆனாலும், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யும் அணிகள் தோல்வியையே சந்திக்கின்றன. அதற்கு காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. இரண்டாவது ஆடும் அணிகள் பெரும்பாலும் ரன் ரேட் அழுத்தத்தை தாங்காமல் தோல்வி அடைகின்றன.
சிஎஸ்கே அணி வெற்றி - தோல்வி
சிஎஸ்கே அணி மட்டுமே ஒரு போட்டியில் முதலில் பந்துவீசி வெற்றி பெற்றுள்ளது. தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அந்த வெற்றியை பெற்றது. தன் இரண்டாவது போட்டியிலும் முதலில் பந்து வீசிய சிஎஸ்கே, அதில் தோல்வி அடைந்தது.
தோனி டாஸ் வென்றார்
இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி டாஸ் வென்றார். அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அபப்டி செய்யும் அணிகள் தோல்வி அடைகின்றன என்பதை அறிந்தே அப்படி செய்தார். அது பற்றி விளக்கமும் அளித்தார்.
என்ன சொன்னார்?
இது பற்றி தோனி பேசும் போது, இங்குள்ள சூழலுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். போட்டியில் பனிப்பொழிவு பெரிய பங்கு வகிக்கும். இரண்டாவது ஆடிய அணிகள் சரியாக ஆடாமல், தவறுகள் செய்து இருக்கலாம். இரண்டாவது பேட்டிங் செய்வது டிவியில் நன்றாக உள்ளது என்றார்.
எல்லா போட்டியிலும் ஜெயிக்க முடியாது
இங்குள்ள புற்களின் அளவை வைத்துப் பார்த்தால் இது குறைந்த ஸ்கோர் எடுக்கும் போட்டியாக இருக்காது. பிளே - ஆஃப் சுற்றுக்கு முன் 14 போட்டிகள் இருக்கிறது. அதில் எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது. கடந்த போட்டியில் கூட நாங்கள் 200 ரன்கள் எடுத்தோம் என்றார் தோனி.
அணியில் மாற்றம்
சிஎஸ்கே அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் அதிக நோ பால் வீசி, அதிக ரன்களை வாரி வழங்கிய லுங்கி நிகிடி நீக்கப்பட்டார். அவருக்கு பதில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசல்வுட் அணியில் சேர்க்கப்பட்டார்.