அடுத்த விராட் கோலி.. செம எதிர்காலம் இருக்கு.. இளம் சிஎஸ்கே வீரரை பாராட்டித் தள்ளிய சீனியர்!
அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாவிட்டாலும் சில நல்ல வீரர்களை அடையாளம் கண்டுள்ளது.
அதில் ஒருவர் தான் ருதுராஜ் கெயிக்வாட். கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கிய இந்த இளம் வீரர், கடைசி மூன்று போட்டிகளில் ஆடிய ஆட்டம் அடுத்த சீசன் வரை மறக்க முடியாதது.

மூன்று அரைசதம்
ருதுராஜ் கெயிக்வாட் சிஎஸ்கே அணியின் கடைசி மூன்று போட்டிகளில் பங்கேற்று மூன்று அரைசதம் அடித்தார். அந்த மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக விளங்கினார். எந்த அழுத்தத்தையும் குறித்து அவர் கவலை கொள்ளவில்லை.

பஞ்சாப் போட்டியில் வெற்றி
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சீனியர் வீரரான பாப் டுபிளெசிஸ்-உடன் துவக்க வீரராக களமிறங்கி ஆடினார். ருதுராஜ் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். டுபிளெசிஸ் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து இருந்தார். பஞ்சாப் நிர்ணயித்த 154 ரன்கள் இலக்கை சிஎஸ்கே 18.5 ஓவரில் எட்டியது.

அடுத்த விராட் கோலி
இந்த வெற்றிக்கு பின் பேசிய பாப் டுபிளெசிஸ், ருதுராஜ் கெயிக்வாட் அடுத்த விராட் கோலி போல ஆடுவதாக கூறி பாராட்டித் தள்ளினார். குறிப்பாக, அழுத்தமான சூழ்நிலைகள் அவரை ஒன்றுமே செய்யவில்லை. அது ஒரு இளம் வீரரிடம் காணப்படும் அரிய விஷயம் என அவர் கூறினார்.

சாதனை
சிஎஸ்கே அணியின் வரலாற்றில் தொடர்ந்து மூன்று அரைசதம் அடித்த ஒரே வீரர் ருதுராஜ் கெயிக்வாட் தான். அதே போல, ஐபிஎல் வரலாற்றிலும் தொடர்ந்து மூன்று அரைசதம் அடித்த முதல் உள்ளூர் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் தான்.


Click it and Unblock the Notifications