
சூர்யகுமார் யாதவ்
2020 ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வென்றதில் அவரது பங்கும் இருந்தது. அவர் உள்ளூர் போட்டிகளிலும் பல ஆண்டுகளாக நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

முன்னாள் வீரர்கள் பரிதாபம்
பிசிசிஐ அவரை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்த நிலையில், அவரது நிலை குறித்து மற்ற அணிகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் கூட பேசி இருந்தனர். அவருக்கு நிச்சயம் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும். எப்படி அவர் இத்தனை ஆண்டுகள் வாய்ப்பின்றி இருக்கிறார் என கேள்வி எழுப்பி இருந்தனர்.

டேனிஷ் கனேரியா
அந்த விஷயத்தை கையில் எடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களை பற்றி பேசாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களால் இருக்கவே முடியாது என மீண்டும் காட்டி உள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா. சூர்யகுமார் யாதவ் சர்ச்சை குறித்து அரைகுறையான ஒரு தகவலை வைத்துக் கொண்டு பேசி உள்ளார்.

என்ன சொன்னார்?
சூர்யகுமார் யாதவ்வை முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் நியூசிலாந்து அணிக்காக ஆடுமாறு அழைத்ததாகவும், அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் பிசிசிஐ சூர்யகுமார் யாதவ்வுக்கு ஆதரவாக இருந்து அவரை நியூசிலாந்து செல்லாமல் பார்த்துக் கொண்டதாகவும் கூறி உள்ளார்.

உண்மை என்ன?
டேனிஷ் கனேரியா சொல்வது உண்மை அல்ல. ஸ்காட் ஸ்டைரிஸ் வேடிக்கையாக ஒரு பதிவில், நல்ல பார்மில் இருந்தும் வாய்ப்பு இல்லாத சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து அணிக்காக ஆடலாம் என கூறி இருந்தார். அது அவருக்கான நேரடி அழைப்பு அல்ல. ஒரு ஆதங்கத்தில் அப்படி வேடிக்கையாக கூறி இருந்தார் ஸ்டைரிஸ்.

எதற்காக சொன்னார்?
அதை வைத்து நியூசிலாந்து அணி, சூர்யகுமார் யாதவ்வை தங்கள் அணியில் சேர்க்க முயன்றதாக அரைகுறையாக கூறி இருக்கிறார் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் வீரர் சமி அஸ்லாம் சமீபத்தில் அமெரிக்காவில் ஆட நாட்டை விட்டே சென்று விட்டார்.

என்னையும் அழைத்தார்கள்
சமி அஸ்லாம் நல்ல வீரர். ஆனால், அவருக்கு வாய்ப்பு கொடுக்காததால் அவர் பாகிஸ்தான் நாட்டை விட்டே சென்று விட்டார் என குற்றம் சுமத்திய கனேரியா, தன்னையும் இரண்டு அணிகள் அழைத்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications