
இரண்டாவது லீக் போட்டி
2020 ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டி நேற்று துபாயில் நடந்தது. அந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சொதப்பல்
டெல்லி அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் படு சொதப்பலாக ஆடினர். ப்ரித்வி ஷா 5, தவான் 0, ஹெட்மயர் 7 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 39, ரிஷப் பண்ட் 31 ரன்கள் குவித்தனர்.

டெல்லி ரன் குவிப்பு
மார்கஸ் ஸ்டோனிஸ் 21 பந்துகளில் 53 ரன்கள் சேர்க்க, மோசமான நிலையில் இருந்த டெல்லி அணி 157 ரன்களை எடுத்து சவால் விடுத்தது. 158 ரன்கள் இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் தவிர எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று ஆடவில்லை.

மயங்க் அகர்வால் அபாரம்
மயங்க் அகர்வால் 60 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். இந்த சேஸிங்கில் 19வது ஓவரின் மூன்றாவது பந்தில் மயங்க் அகர்வால் பந்தை தட்டி விட்டு இரண்டு ரன் ஓடினார். ஆனால், ஒரு ரன் மட்டுமே கொடுத்தார் அம்பயர் நிதின் மேனன்.

அம்பயர் தவறான முடிவு
எதிரில் இருந்த பேட்ஸ்மேன் கிறிஸ் ஜோர்டான் முதல் ரன் ஓடும் போது பேட்டை கிரீஸில் வைத்த போதும், அதை சரியாக கவனிக்காமல் அதை ஷார்ட் ரன் எனக் கூறி நிதின் மேனன் ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். ஆனால், அது கடைசி ஓவரில் சிக்கலை ஏற்படுத்தியது.

போட்டி டை
கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணி 12 ரன்களை எடுத்தது. கடைசி ஒரு ரன்னை எடுக்கும் முன் மயங்க் அகர்வால், ஜோர்டான் கடைசி இரண்டு பந்துகளில் ஆட்டமிழந்தனர். போட்டி டை ஆகி சூப்பர் ஓவர் சென்றது.

ரசிகர்கள் கோபம்
சூப்பர் ஓவரில் டெல்லி அணி வென்றது. இந்த நிலையில், அம்பயர் அந்த ஒரு ரன்னை கொடுக்காமல் விட்டதால் தான் போட்டியில் பஞ்சாப் தோல்வி அடைந்தது. இல்லாவிட்டால் பஞ்சாப் கடைசி ஓவரில் வெற்றி பெற்று இருக்கும் என ரசிகர்கள் இணையத்தில் கொதித்து எழுந்தனர்.

சேவாக் விளாசல்
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட இதை சுட்டிக் காட்டினர். வீரேந்தர் சேவாக் ஆட்டநாயகன் விருதை அம்பயருக்குத் தான் கொடுக்க வேண்டும் என சரமாரியாக விளாசினார். இர்பான் பதானும் இது குறித்து கேள்வி எழுப்பினார்.

ஸ்காட் ஸ்டைரிஸ்
முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறுகையில், அந்த 1 ரன் ஷார்ட் பால் என கொடுத்தது தவறு தான். அதே சமயம் கடைசி மூன்று பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் பஞ்சாப் போட்டியை டை செய்தால் என்ன செய்ய முடியும் எனவும் கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











