
டிசியின் புதிய பௌலிங் கோச்
ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் 19ம் தேதி துவங்கவுள்ள நிலையில், 8 அணிகளும் தங்களை முழுமையாக போட்டிகளுக்காக தயார் செய்து வருகின்றன. ஏற்கனவே டெல்லி கேபிடல்ஸ் அணியில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், முகமது கையிஃப், சாமுவேல் பத்ரி மற்றும் விஜய் தாஹியா போன்றவர்கள் பயிற்சியாளர்களாக உள்ள நிலையில் தற்போது அணியின் பௌலிங் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் பௌலர் ரியான் ஹாரீஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

சொந்த காரணங்கள் என அறிவிப்பு
அணியின் பௌலிங் கோச்சாக இருந்த ஜேம்ஸ் ஹோப்ஸ் சொந்த காரணங்களால் இந்த சீசனில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மாற்றாக ஹாரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2009ல் டெக்கான் சார்ஜர்ஸ் கோப்பையை வென்ற நிலையில் அந்த அணியில் இடம்பெற்றிருந்தார்.

ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர்
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் 113 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 44 விக்கெட்டுகள் மற்றும் டி20 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வைத்துள்ள ஹாரீஸ் காயங்கள் காரணமாக கடந்த 2015ல் தனது ஓய்வை அறிவித்தார். தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் பிக் பாஷ் லீக் உள்ளிட்ட தொடர்களில் இவர் கோச்சாக பணிபுரிந்துள்ளார்.

மகிழ்ச்சியளிப்பதாக உற்சாகம்
ஐபிஎல்லிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பௌலிங் பயிற்சியாளராக ஹாரீஸ் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், மீண்டும் ஐபிஎல் தொடரில் இணைந்தது மகிழ்ச்சியளிப்பதாக ஹாரீஸ் தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் இந்த முறை டெல்லி கேபிடல்ஸ் அணி கோப்பையை கைப்பற்ற தான் சிறந்த பங்களிப்பை அளிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன் பௌலிங் வரிசை சிறப்பாக உள்ளதாகவும் குறப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











