ஏப்ரல் 15 வரை தள்ளிவைப்பு
மூன்று மாநிலங்கள் ஐபிஎல் நடத்த எதிர்ப்பு கூறி இருப்பதால், ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டாலும், ஆள் இல்லாத காலி மைதானத்தில் கூட ஐபிஎல் போட்டிகள் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடர்
இந்தியாவில் கொரோனா பாதிப்பை ஒட்டி விவாதிக்கப்பட்டு வரும் விஷயங்களில் முதன்மையானது ஐபிஎல் தொடர் தான். உலகின் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் மார்ச் 29 முதல் மும்பை நகரில் துவங்க உள்ளது. 56 லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
சந்தேகம்
ஆனால், கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. பல இடங்களில் இருந்து இந்த தொடருக்கு எதிர்ப்பும் கிளம்பியது.
விளையாட்டுத் தொடர்கள்
கொரோனா வைரஸ் கூட்டமாக இருக்கும் பகுதிகளில் மிக அதிகமாக பரவி வருகிறது. அதனால், உலகம் முழுவதும் விளையாட்டுத் தொடர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் போட்டி நடைபெற்று வருகிறது.
விளையாட்டுத் துறை அறிவிப்பு
இந்தியாவில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டாம் என்றும், அப்படி நடத்தியே ஆக வேண்டும் என்றால் பார்வையாளர்கள் இல்லாதவாறு நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளது.
எதிர்ப்பு
அதன்படி ஐபிஎல் தொடரை பார்வையாளர்கள் இல்லாமல், காலி மைதானங்களில் நடத்த பிசிசிஐ வட்டாரம் திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரை நடத்தினால் அதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவலாம் என மூன்று மாநிலங்கள் எதிர்ப்பு கூறி உள்ளன.
அனுமதிக்க மாட்டோம்
கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களும் ஐபிஎல் தொடரை நடத்த அனுமதிக்க மாட்டோம் என கூறி உள்ளன. அவர்கள் ரசிகர்கள் கூட்டத்தோடு ஐபிஎல் நடத்தத் தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக கருதப்பட்டது.
டெல்லி உறுதி
ஆனால், டெல்லி மாநிலம் எந்த விளையாட்டு நிகழ்வையும் அடுத்த ஒரு மாதத்துக்கு அனுமதிக்க முடியாது என உறுதியாக கூறி உள்ளது. அதனால், பிசிசிஐ ஏப்ரல் 15 அன்று துவங்கினாலும், ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டாலும், டெல்லியில் நடக்க வாய்ப்பு குறைவு தான்.
விடை தெரியா கேள்விகள்
மேலும், ஏப்ரல் 15க்கு பின் கொரோனா வைரஸ் அடங்கி விடுமா? அப்போது இந்திய அரசு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு விசா வழங்குமா? ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தினாலும், வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது மற்ற வீரர்களையும் பாதிக்குமே? என பல விட தெரியாத கேள்விகள் உள்ளன.