
தோனி ஓய்வு செய்திகள்
கடந்த ஆண்டு 2019 உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறுவதாக செய்திகள் வலம் வந்தது. ஆனால், தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை. அவரை இந்திய அணியிலும் தேர்வு செய்யவில்லை. பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

தோனி முயற்சி
அதனால், தோனி இனி இந்திய அணியில் இடம் பெறவே முடியாது என கூறப்பட்டது. ஆனால், தோனி 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்று இந்திய அணியில் இடம் பெற முயற்சி செய்ய உள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.

பயிற்சி முகாமில் அதிரடி
அது உண்மை தான் என்பது போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் தீவிரமாக செயல்பட்டார் தோனி. மார்ச் 2 முதல் 2020 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி முகாமில் தோனி பங்கேற்றார்.

இமாலய சிக்ஸர்கள் அடித்தார்
அந்த முகாமில் மிகத் தீவிரமாக பேட்டிங் பயிற்சியில் ஈடுப்பட்டார். வலைப் பயிற்சி மற்றும் பயிற்சிப் போட்டிகளில் தோனி அடித்த இமாலய சிக்ஸர்கள் வீடியோ அப்போது ரசிகர்கள் இடையே பரவியது. அதைக் கண்ட பலரும் தோனி தன் பார்மை நிரூபிக்கும் முயற்சியில் இருப்பதாக கூறினர்.

விக்கெட் கீப்பிங் பயிற்சி
இந்த நிலையில், தோனி கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்ததாக கூறி உள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிஸியோதெரபிஸ்ட். இது பல ரசிகர்கள் அறியாத முக்கிய தகவலாக இருந்தது.

பிஸியோ அச்சம்
தோனி திடீரென தீவிர பயிற்சியில் இறங்கியதால் அவருக்கு காயம் ஏற்படுமோ என அஞ்சி உள்ளார் பிசியோதெரபிஸ்ட். ஆனால், தோனி தான் இந்த பயிற்சி முகாமுக்கு ஒரு மாதம் முன்பே லேசான பயிற்சிகளை துவங்கி விட்டதாக கூறி அவரை அமைதிப்படுத்தி உள்ளார்.

தோனியின் துவக்க காலம்
தோனி துவக்க காலத்தில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பலாகவே ஆடினார். ஆனால், மிகச் சில போட்டிகளுக்குள் தன் விக்கெட் கீப்பிங் திறனை பட்டை தீட்டிக் கொண்டார். ஒரு கட்டத்தில் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற பெயரை எடுத்தார்.

வெளியான உண்மை
அதன்பின், தோனி 10 ஆண்டுகளாக விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்யவில்லை என்ற உண்மை இப்போது சிஎஸ்கே பிசியோதெரபிஸ்ட் மூலம் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. அதே சமயம், தோனி எந்த அளவுக்கு தன் விக்கெட் கீப்பிங் திறன் மீது நம்பிக்கையுடன் இருந்துள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

சாத்தியமா?
10 ஆண்டுகளுக்கு பின் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்த தோனி, இந்திய அணியில் இடம் பெறவே அதை செய்து உள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், அது இப்போது சாத்தியமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு காரணம் ஐபிஎல் தொடர் தான்.

கொரோனா வைரஸ் சிக்கல்
ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம் பெற்று, டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட வேண்டும் என முயற்சி செய்த தோனிக்கு கொரோனா வைரஸ் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அந்த தொடர் நடக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications