இறுதியில் சிஎஸ்கே
2019 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். இறுதிப் போட்டியில் கடைசி ஓவர் வரை போராடி தோல்வி அடைந்தது. இந்த சீசனில் எப்படியாவது சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சென்று கோப்பையையும் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
மந்தமான மைதானம்
2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் போலவே, அங்குள்ள மூன்று மைதானங்களும் மந்தமானவை. அதனால், இந்த சீசன் சென்னை அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனியின் யுக்தி
கடந்த சீசனில் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி தான் எதிரணிகளை திக்குமுக்காட வைத்தார் கேப்டன் தோனி. ஐக்கிய அரபு அமீரகத்தின் மந்தமான ஆடுகளங்களிலும் தோனி அதே யுக்தியைத் தான் கையாள்வார். அதனால், சிஎஸ்கே அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் கவனம் பெற்றுள்ளனர்.
சுழற் பந்துவீச்சாளர்கள்
சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், பியுஷ் சாவ்லா, கரன் சர்மா, சாய் கிஷோர் ஆகிய சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் உள்ளூர் வீரர்களான கரன் சர்மா, சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.
கடந்த சீசன் திட்டம்
கடந்த சீசனில் இம்ரான் தாஹிர் பெரும்பாலான போட்டிகளில் இடம் பெற்றார். ஜடேஜா ஆல் - ரவுண்டர் என்பதால் அவரும் பெரும்பாலான போட்டிகளில் ஆடினார். ஹர்பஜன் சிங்கை எதிரணி, ஆடுகளம் ஆகியவற்றுக்கு ஏற்ப மாற்றி, மாற்றி பயன்படுத்தினார் தோனி.
பியுஷ் சாவ்லா
பியுஷ் சாவ்லா கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் அவருக்கு அணியில் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக போட்டிகளில் அவர் பங்கேற்கக் கூடும்.
வயதான வீரர்
தோனியின் துருப்புச் சீட்டாக வலம் வந்த இம்ரான் தாஹிருக்கு 41 வயதாகிறது. அவரை அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க வைப்பது அவருக்கு சோர்வை அளிக்கக் கூடும். இதன் காரணமாகவே ஒரு நல்ல சுழற் பந்துவீச்சாளர் வேண்டும் என தோனி டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.
இவருக்குத் தான் வாய்ப்பு
அதன் காரணமாகவே பியுஷ் சாவ்லாவை போட்டி போட்டு வாங்கியது சிஎஸ்கே அணி நிர்வாகம். அவரை வாங்குமாறு அறிவுறுத்தியதும் தோனி தான் என கூறப்படுகிறது. தோனியே அவரை வாங்குமாறு கூறி இருப்பதன் மூலம் அவருக்கு தான் அணியில் அதிக வாய்ப்பு கிடைக்கும்.
வெளிநாட்டு வீரர்கள்
இந்த ஆண்டு வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர்களில் சாம் கர்ரன், நிகிடி ஆகியோரில் ஒருவரை கூடுதலாக பயன்படுத்த தோனி திட்டமிடுவார். ஒரு போட்டியில் நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில், இம்ரான் தாஹிரை அதிக போட்டிகளில் ஆட வைக்க முடியாததற்கு ஒரு காரணமாக இருக்கும்.
திட்டம்
மூத்த வீரர்களான இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் போட்டிகளில் மாற்றி, மாற்றி பயன்படுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது. ஜடேஜா, பியுஷ் சாவ்லா அதிக போட்டிகளில் பங்கேற்பார்கள். கரன் சர்மா இவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் ஒரீரு போட்டிகளில் வாய்ப்பு பெறலாம்.