
முக்கிய வீரர்கள் இல்லை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனை மோசமான நிலையில் தான் துவங்கியது. மூத்த வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகினர். முதல் சில போட்டிகளில் முக்கிய ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோ ஆட முடியாத நிலையில் இருந்தார்.

பிராவோவுக்கு என்ன ஆச்சு?
பிராவோ ஐபிஎல் தொடருக்கு முன் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடினார். அப்போது அவரது காலில் காயம் ஏற்பட்டது. அதனால், அவரால் பந்து வீச முடியவில்லை. சிஎஸ்கே அணியின் முதல் மூன்று போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.

சமநிலை இல்லை
முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் அணியில் சமநிலை இல்லாமல் தடுமாறியது சிஎஸ்கே அணி. கூடுதல் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தோனி ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துக் கொண்டு களமிறங்க வேண்டிய நிலை இருந்தது. அதற்கு காரணம் பேட்டிங் பலம் குறைந்து இருந்தது தான்.

தோல்விகள்
பேட்டிங்கில் பலத்தை அதிகரிக்க அதிக பேட்ஸ்மேன்களை ஆட வைத்த தோனி, அணியின் பந்துவீச்சை சரியாக கையாளவில்லை. பேட்டிங், பந்துவீச்சு இரண்டுமே சொதப்பியதால் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.

பிராவோ நிலை
இந்த நிலையில், அடுத்த போட்டியில் மாற்றம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் டிவைன் பிராவோ அணியில் இணைய உள்ளார். அவர் காயம் குணமாகி போட்டிகளில் ஆடத் தயாராகி விட்டதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறி உள்ளது.

யாரை நீக்குவது?
இப்போது மற்றொரு சிக்கல் எழுந்துள்ளது. பிராவோ வெளிநாட்டு வீரர் என்பதால் அவர் சிஎஸ்கே அணியில் இணைந்தால் ஏற்கனவே அணியில் இருக்கும் ஒரு வெளிநாட்டு வீரரை நீக்க வேண்டும். யாரை நீக்குவது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இவர்களை நீக்க முடியாது
ஷேன் வாட்சன், பாப் டுபிளெசிஸ் இருவரும் பேட்டிங்கில் அவசியம் என்பதால் அவர்களை தோனி நீக்க மாட்டார். பிராவோவுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட இளம் ஆல் - ரவுண்டர் சாம் கர்ரன் சிறப்பாக ஆடி வருகிறார். அவரை நீக்கினால் அது அணிக்கு பின்னடைவாகவே அமையும்.

ஹேசல்வுட் ஆட்டம்
இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் லுங்கி நிகிடிக்கு பதில் இடம் பெற்ற ஹேசல்வுட் தான் பிராவோவுக்கு வழிவிட வேண்டிய நிலையில் இருக்கிறார். ஹேசல்வுட் வேகப் பந்துவீச்சாளர். மூன்றாவது போட்டியில் அவர் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

நியாயமே இல்லை
ஜோஷ் ஹேசல்வுட் ஒரு போட்டியில் மட்டுமே ஆடி உள்ளார். அவர் மோசமாகவும் பந்து வீசவில்லை. அவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் அணியை விட்டு நீக்குவது நியாயமே இல்லை. ஆனால், கேப்டன் தோனிக்கு வேறு வழியில்லை. பிராவோ தான் முக்கியம் என கருதுகிறார் தோனி.

ராயுடு வருகிறார்
பிராவோ மட்டுமின்றி முதல் போட்டியில் சிறப்பாக ஆடி பின் அடுத்த இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக ஆடாத அம்பதி ராயுடுவும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடுவார் என சிஎஸ்கே நிர்வாகம் கூறி உள்ளது.


Click it and Unblock the Notifications











