கொல்கத்தா அணி கேப்டன்
தினேஷ் கார்த்திக் இன்றைய தேதியில் கிரிக்கெட் உலகில் ஐபிஎல் அணி கேப்டன் என்ற மதிப்புடன் இருக்கிறார். இந்த உயர்வு கூட அவருக்கு 2018 ஐபிஎல்-இல் தான் கிடைத்தது. அதற்கு முன்பு வரை அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஐபிஎல்-இலும், இந்திய அணியிலும் நிலையற்ற வீரராகவே இருந்தார்.
விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் 2004இல் அறிமுகம் ஆனார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் தன் 18வது வயதில் அடி எடுத்து வைத்தார். ஆனால், அவரால் தன் வாய்ப்புக்களை தக்க வைக்க முடியவில்லை. அதனால், அணியில் இரண்டாம் கட்ட விக்கெட் கீப்பராக மாறினார்.
தோனி வருகை
அந்த சமயத்தில் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக தோனி மாறினார். சில ஆண்டுகளில் தோனி பெரிய வளர்ச்சி பெற்றார். தோனியின் அதிரடி பேட்டிங் மற்றும் மேட்ச் வின்னர் என்ற தகுதிக்கு முன் வேறு எந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் வர முடியவில்லை.
அணியில் இடத்தை இழந்தார்
தினேஷ் கார்த்திக் பின் இந்திய அணியில் தன் இடத்தை இழந்தார். அவரால் மீண்டும் அணிக்குள் நுழைய முடியவில்லை. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்தார் தினேஷ் கார்த்திக். அதனால், தோனிக்கு அடுத்த மாற்று விக்கெட் கீப்பர் என்ற இடத்திலேயே இருந்தார்.
ஐபிஎல் துவக்கம்
அப்போது 2008இல் ஐபிஎல் தொடர் துவங்கியது. அதில் எட்டு நகரங்களை முன் வைத்து அணிகள் உருவாக்கப்பட்டது. அதனால், அந்தந்த மாநில அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு அந்த அணிகளில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என கருதப்பட்டது. குறிப்பாக, இந்திய அணியில் ஆடிய அனுபவ வீரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டது.
ஐபிஎல் ஏலம்
அப்போது தினேஷ் கார்த்திக் தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் தேர்வு செய்யும் என நம்பினார். காரணம், அப்போது இந்திய அணியில் ஆடிய, அனுபவம் உள்ள இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அவர் தான். அப்போது அணியில் மாற்று விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலிய தொடரில் கூட பங்கேற்று இருந்தார்.
பெரும் ஏமாற்றம்
அப்போது ஏலத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி பெயர் அறிவிக்கப்பட உடன் போட்டி போட்டுக் கொண்டு அவரை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். அது ஆஸ்திரேலியாவில் இருந்த தினேஷ் கார்த்திக்குக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
தோனி தந்த அதிர்ச்சி
அதை விட அதிர்ச்சி அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவில் அவருக்கு அருகே தான் தோனி அமர்ந்து இருந்துள்ளார். அவருக்கு அனேகமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னை வாங்க வாய்ப்புள்ளது என்பது தெரிந்திருக்கக் கூடும். ஆனால், அதை அவர் தினேஷ் கார்த்திக்கிடம் கூறவில்லை. அதனாலும் அதிர்ச்சி அடைந்துள்ளார் தினேஷ்.
இதயத்தில் குத்திய சிஎஸ்கே
இது பற்றி மனம் திறந்து தன் வலியை வெளியே கொட்டிய தினேஷ், "2008இல் ஏலம் நடந்த போது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். அப்போது தமிழ்நாட்டின் முக்கிய வீரர் மற்றும் நாட்டுக்காக ஆடுகிறேன் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் என்னைத் தான் தேர்வு செய்வார்கள் என நான் நம்பினேன்." என்றார்.
இதயத்தில் காயம்
மேலும், "அவர்கள் என்னை கேப்டனாக ஆக்குவார்களா? இல்லையா? என்பது தான் என் மனதில் அப்போது இருந்த கேள்வி. ஆனால், அவர்கள் முதலில் தேர்வு செய்த வீரர் தோனி. அவர் அப்போது என் அருகில் தான் அமர்ந்து இருந்தார். அவர் தன்னை தான் அவர்கள் தேர்வு செய்யப் போகிறார்கள் என என்னிடம் சொல்லவே இல்லை. அவருக்கு அது தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அது என் இதயத்தில் ஏற்பட்ட பெரிய காயம். அவர்கள் என்னை பின்னர் தேர்வு செய்வார்கள் என நான் நினைத்தேன். 13 ஆண்டுகள் ஆகி விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் என்னை அழைக்கும் என நான் காத்துக் கொண்டு இருக்கிறேன்" என்றார் தினேஷ் கார்த்திக்.