விராட் கோலி ரன் குவிப்பு
இந்த சீசனில் விராட் கோலி முதல் சில போட்டிகளில் ரன் குவிக்கவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தார். அவரால் தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. பின்னர் அவர் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவிக்கத் துவங்கினார்.
ஒரு பிரச்சனை
ஆனால், அதில் ஒரு பிரச்சனை இருந்தது. கோலி மிகவும் நிதானமாகவே ரன் சேர்த்தார். வழக்கமாக கோலி டி20 போட்டிகளில், ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக ஆடுவார். ஆனால், இந்த முறை 466 ரன்கள் குவித்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 121 தான்.
பெங்களூர் அணி சிக்கல்
கோலி நிதான ஆட்டம் ஆடியதால் பெங்களூர் அணி இந்த தொடர் முழுவதும் மத்திய ஓவர்களில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. பல போட்டிகளில் கடைசி சில ஓவர்களில் ஏபி டிவில்லியர்ஸ் ரன் குவித்து அணியைக் காப்பாற்ற போராடினார்.
ஐந்து தோல்விகள்
இந்த நிலையில் துவக்கத்தில் வெற்றிகளை குவித்த பெங்களூர் அணி லீக் சுற்றின் கடைசி நான்கு போட்டிகள் மற்றும் எலிமினேட்டர் போட்டி என வரிசையாக ஐந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்து பரிதாப நிலையை அடைந்தது.
கவாஸ்கர் விமர்சனம்
இது பற்றி கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். கோலி தனக்கு தானே வகுத்துக் கொண்ட அளவின் படி இந்த சீசனில் பேட்டிங் செய்யவில்லை என்றார் அவர். பெங்களூர் அணி இறுதிப் போட்டி வரை செல்லாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம் என அவரது குறைந்த ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசினார்.
குழம்பிய வீரர்கள்
மேலும், கோலி ஆட்டத்தால் மிடில் ஆர்டரில் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே பேட்டிங் ஆர்டரில் மாற்றி, மாற்றி ஆட வைக்கப்பட்டனர். அதனால் அவர்கள் அதிரடியாக ஆடுவதா? இல்லையா? என புரியாமல் குழம்பிப் போனார்கள் என்றார் கவாஸ்கர்.
நல்ல வீரர்
ஐந்தாம் வரிசையில் நிலையான வீரர் ஒருவர் ஆடி இருந்தால் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் அழுத்தம் இல்லாமல் தங்கள் இயல்பான ஆட்டத்தை ஆடி இருப்பார்கள் எனவும் கூறினார் கவாஸ்கர். ஐந்தாம் வரிசையில் நல்ல வீரர் இல்லாததால் அவர்கள் விக்கெட்டை தற்காத்து ஆடியதாக அவர் கூறி உள்ளார்.