
சிஎஸ்கே அணி நிலை
2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான நிலையில் ஆடி வருகிறது. 2018இல் ஐபிஎல் கோப்பை வென்று, 2019இல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அதில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அணி போல 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இல்லை.

ஐந்து தோல்விகள்
தான் ஆடிய முதல் ஏழு லீக் போட்டிகளில் ஐந்து தோல்விகளை சந்தித்து மோசமான நிலையில் உள்ளது சிஎஸ்கே அணி. அந்த அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யபப்பட்ட நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. பந்துவீச்சு ஓரளவு முன்னேறி இருந்தாலும் பேட்டிங் கை விட்டு வருகிறது.

மோசமான மிடில் ஆர்டர்
குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்டிங் மிக மோசமாக உள்ளது. கேதர் ஜாதவ், தோனி இருவரும் அதிக பந்துகளை வீணடித்து வருகின்றனர். ஜாதவ் நீக்கப்பட்ட நிலையிலும் கூட மிடில் ஆர்டர் பேட்டிங் முன்னேறவில்லை. அதை எப்படி மாற்றுவது என தெரியாமல் திணறி வருகிறார் தோனி.

பிளே-ஆஃப் வாய்ப்பு?
இந்த நிலையில், 7 போட்டிகளில் ஐந்து தோல்விகள் பெற்றுள்ள சிஎஸ்கே அணியால் பிளே-ஆஃப் செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த 16 புள்ளிகள் வேண்டும். மீதமுள்ள ஏழு போட்டிகளில் ஆறில் வென்றால் சிஎஸ்கே அணி அந்த வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

ரசிகர்கள் நம்பிக்கை
சிஎஸ்கே இந்த சீசனில் பிளே-ஆஃப் செல்வது சாத்தியமே இல்லை என பலரும் கூறி வரும் நிலையில், சிஎஸ்கே மற்றும் தோனியின் தீவிர ரசிகர்கள் மட்டுமே இன்னும் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுள்ளனர். 2010 ஐபிஎல் தொடர் போல அந்த அணி வெற்றி பெறும் என நம்புகின்றனர்.

2010 ஐபிஎல்
2010 ஐபிஎல் தொடரில் அப்படி என்ன தான் நடந்தது? அந்த தொடரில் தான் சிஎஸ்கே அணி தன் முதல் ஐபிஎல் கோப்பை வென்றது. அந்த சீசனின் துவக்கத்தில் சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் முன்னேறுமா? என்பதே சந்தேகமாக இருந்தது.

ஐந்து தோல்வி
அப்போதும் சிஎஸ்கே அணி லீக் சுற்றில் தன் முதல் ஏழு போட்டிகளில் ஐந்தில் தோல்வி அடைந்து இருந்தது. அடுத்த ஏழு போட்டிகளில் ஐந்து வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று, டெல்லி அணியை நெட் ரன் ரேட் அடிப்படையில் முந்தி பிளே-ஆஃப் சென்றது.

கோப்பை வென்ற சிஎஸ்கே
2010 ஐபிஎல் தொடரில் அரை இறுதிப் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றி பெற்று தன் முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

தோனியின் மேஜிக்
அந்த சீசனில் தோனி கேப்டனாக மேஜிக் செய்து எப்படியோ சிஎஸ்கே அணியை கோப்பை வெல்ல வைத்தார். அதே போல 2020 ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே அணி முதல் ஏழு போட்டிகளில் ஐந்து தோல்விகளை பெற்று இருந்தாலும் தோனியின் மேஜிக்கால் ஐபிஎல் கோப்பை வெல்லும் என கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

இதெல்லாம் நடக்குமா?
2010 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் துடிப்பான வீரர்கள் இருந்தனர். அந்த சீசனில் ஆடிய சில வீரர்கள் இப்போதும் அணியில் உள்ளனர். வயதான வீரர்கள் மற்றும் அடித்து ஆடும் நோக்கமே இல்லாத பேட்டிங் ஆகியவற்றை வைத்துக் கொண்டு சிஎஸ்கே அணி இந்த சீசனில் கோப்பை வெல்வது கடினமே.


Click it and Unblock the Notifications