ஐபிஎல் தள்ளி வைப்பு
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து எப்போது துவங்கும் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.
வாய்ப்பு இதுதான்
மீண்டும் ஐபிஎல் தொடர் நடக்க வேண்டும் என்றால் கொரோனா பாதிப்பு குறைய வேண்டும். மேலும், மாநில அரசுகள் ஒத்துழைப்பும் அவசியம். இப்போதைக்கு இந்தியா முழுவதும் பல மாநில அரசுகள் மக்கள் கூட்டமாக கூடும் இடங்களை மூட உத்தரவிட்டுள்ளன. விளையாட்டுப் போட்டிகள் நடத்த வாய்ப்பே இல்லை.
ஐபிஎல் அணிகள் முடிவு
இப்படி சூழ்நிலைகள் மோசமாகி வரும் நிலையில் ஐபிஎல் அணிகள் அனைத்தும், 2020 ஐபிஎல் தொடர் நடக்காது என்ற முடிவுக்கே வந்து விட்டன. அதனால், நஷ்டத்தை ஏற்கவும் அவர்கள் தயாராகி வருவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
காரணம் என்ன?
வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வர வாய்ப்பு இருந்தால், நிச்சயம் ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்பது தான் உண்மை. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருகிறது. அதனால், வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆட முடியாது என்பது தான் முக்கிய காரணம்.
விசா சிக்கல்
மேலும், இந்திய அரசு ஏப்ரல் 15 வரை வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்க முடியாது என அறிவித்துள்ளது. அதனால், ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் சுமார் 60 வெளிநாட்டு வீரர்களுக்கு விசா கிடைக்காது
கிரிக்கெட் அமைப்புகள்
அப்படியே இந்திய அரசு விசா வழங்கினாலும், வெளிநாட்டு கிரிக்கெட் அமைப்புகள் தங்கள் வீரர்களை, கொரோனா வைரஸ் பரவும் சமயத்தில் இந்தியாவுக்கு அனுப்புமா? என்ற சந்தேகம் உள்ளது. அதனால், ஐபிஎல் நடப்பது சந்தேகம் தான்.
கொரோனா குறையுமா?
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அது குறைந்தால் மட்டுமே வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வர வாய்ப்பு உள்ளது. அப்போது ரசிகர்கள் இல்லாத நிலையில் ஐபிஎல் நடக்க வாய்ப்பு உள்ளது.
ஐபிஎல் அணிகள் நஷ்டம்
இப்படிப்பட்ட மோசமான சூழலில் நடக்க வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ள ஐபிஎல் அணிகள், ஐபிஎல் ரத்து செய்யப்பட்டால் ஏற்படும் நஷ்டத்தை இப்போதே கணக்கு போடத் துவங்கி உள்ளனர். மக்கள் கொரோனா அச்சத்தில் இருக்கும் போது, ஐபிஎல் தொடர் தேவையற்றது.