
2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் துவங்கி மே மாதம் வரை நடைபெற இருந்தது. அந்த கால கட்டத்தில் தொடர் நடந்து இருந்தால் பிசிசிஐ சுமார் 4000 கோடி வருமானத்தை அள்ளி இருக்கும். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளிப் போனது.

ஐபிஎல் தொடர்
2020 டி20 தொடர் தள்ளி வைக்கப்பட்டதால் அதே நாட்களில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. இப்படி கொரோனா வைரஸ் பாதிப்பால் சிக்கலில் உள்ளது பிசிசிஐ.

விவோ மொபைல் விலகல்
இதற்கு மத்தியில் சீன நிறுவனங்களுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பு காரணமாக ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சரான விவோ மொபைல் நிறுவனம் விலகியது. இதை அடுத்து ட்ரீம் 11 நிறுவனம் விவோ கொடுத்ததில் பாதி தொகையை அளித்து ஸ்பான்சராகி உள்ளது.

ஃபியூச்சர் குழுமம் விலகல்
இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட கூடுதலாக இரண்டு நிறுவனங்களை விளம்பரதாரராக சேர்த்துக் கொண்டது பிசிசிஐ. ஆனால், தற்போது ஏற்கனவே விளம்பர ஒப்பந்தத்தில் இருந்த ஃபியூச்சர் குழுமம் விலகுவதாக அறிவித்து பிசிசிஐக்கு திகிலை ஏற்படுத்தி உள்ளது.

கடும் நஷ்டம்
ஃபியூச்சர் குழுமம் ஆண்டுக்கு 40 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தம் செய்து இருந்தது. ரீட்டெயில் நிறுவனமான ஃபியூச்சர், கொரோனா வைரஸ் பாதிப்பால் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளது. அதில் இருந்து மீளும் வழிகளை ஆராய்ந்து வருகிறது.

40 கோடி நோ சான்ஸ்
இந்த நிலையில், தங்களால் ஐபிஎல் தொடருக்கு 40 கோடி ரூபாய்க்கு விளம்பரம் அளிக்க முடியாது என்ற முடிவை எடுத்து விலகி உள்ளது. பிசிசிஐ அடுத்து ஒரு புதிய விளம்பரதாரரை தேடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் அணிகள் சோகம்
ஏற்கனவே, ஐபிஎல் அணிகள் விளம்பர வருவாய் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதிருப்தியில் உள்ளன. இந்த நிலையில், விவோ, ஃபியூச்சர் விலகலால் அதில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பகுதி வருமானமும் கிடைக்காமல் போகும் என்பதால் சோகத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications











