
2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு மத்தியில் நடைபெறுகிறது. இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. கடும் கட்டுப்பாடுகளுடன் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் தொடரை நடத்த பிசிசிஐ முயன்று வருகிறது.

சிஎஸ்கே அணியில் பாதிப்பு
எனினும், சிஎஸ்கே அணியில் 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த செய்தி பலருக்கும் அச்சத்தை அளித்துள்ளது. சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இந்தியா சென்றுள்ளார்.

ஹர்பஜன் சிங் விலகல்
அவர் சிஎஸ்கே அணியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் தான் இந்தியா சென்றார் என கூறப்படுகிறது. இதன் இடையே மூத்த சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் விலகி உள்ளார். இது சிஎஸ்கே அணிக்கு பெருத்த அடியாக கருதப்படுகிறது.

அச்சம்
ஹர்பஜன் சிங் துவக்கம் முதலே கொரோனா வைரஸ் குறித்த தன் அச்சத்தை வெளிப்படுத்தி வந்தார். பாதிப்புக்கு நடுவே ஐபிஎல் தொடரே நடத்த வேண்டாம் என அவர் பல முறை கூறி இருந்தார். சென்னையில் சிஎஸ்கே நடத்திய பயிற்சி முகாமில் கூட அவர் பங்கேற்கவில்லை.

ஏன் இந்த முடிவு?
ஹர்பஜன் சிங் நேரடியாக துபாய் செல்வார் என முதலில் கூறப்பட்டு வந்தது. பின் சிஎஸ்கே அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து அவர் துபாய் சென்று சிஎஸ்கே அணியுடன் இணையும் முடிவை கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது.

தனிப்பட்ட காரணம்
தற்போது அந்த தகவல் உறுதி ஆகி உள்ளது. ஆனால், ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணியிடம் தனிப்பட்ட காரணங்களால் தான் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கூறி இருக்கிறார். அவர் வைரஸ் அச்சம் காரணமாகவே விலகி இருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சிஎஸ்கே வருத்தப்படவில்லை
சுரேஷ் ரெய்னா மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாக ஒருபுறம் கூறப்பட்டாலும், அவரை சிஎஸ்கே அணி மீண்டும் சேர்த்துக் கொள்ளுமா? என்பது தெரியவில்லை. தற்போது ஹர்பஜன் சிங் விலகியது குறித்தும் சிஎஸ்கே அணி பெரிதாக வருத்தப்படவில்லை.

இழப்பு
எனினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஹர்பஜன் சிங் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு இழப்பு தான். அதே சமயம், சிஎஸ்கே அணியின் இம்ரான் தாஹிர், பியுஷ் சாவ்லா மற்றும் மிட்செல் சான்ட்னர் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











