பண்டியா காயம்
ஹர்திக் பண்டியா கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் சில போட்டிகளில் ஆடினார். அப்போது அவருக்கு இருந்த நீண்ட நாள் முதுகு வலி தீவிரம் அடைந்ததால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், இந்திய அணியில் இருந்து விலகினார்.
நீண்ட கால ஓய்வு
லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், சிகிச்சை முடிந்து நீண்ட காலம் ஓய்வில் இருந்தார். சுமார் 5 மாதம் கழித்து உடற்பயிற்சிகள் மேற்கொண்டு மீண்டும் கிரிக்கெட் ஆடத் தயார் ஆனார். வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டரான அவருக்கு மாற்று வீரர் அணியில் இல்லை என்பதால், அவரது வரவை எதிர்பார்த்து இருந்தார் கேப்டன் கோலி.
நியூசிலாந்து தொடர்
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர், ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் அவரை ஆட வைக்க ஆவலாக இருந்தார். பண்டியாவும் இந்தியா அணியில் ஏ அணியில் இடம் பெற்று நியூசிலாந்து செல்ல தயார் ஆனார்.
அந்த சிக்கல்
ஆனால், அப்போது ஹர்திக் பண்டியாவின் தனிப்பட்ட உடற்பயிற்சி நிபுணர் அவர் இன்னும் சர்வதேச போட்டிகளில் பந்து வீசும் அளவுக்கு தயார் ஆகவில்லை என பிசிசிஐக்கு அறிக்கை அளித்தார். அதையடுத்து அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டார்.
தீவிர பயிற்சி
அங்கே ராகுல் டிராவிட் மேற்பார்வையில் தீவிர பயிற்சி மேற்கொண்டார் பண்டியா. எனினும், அவரால் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு வரை முழு உடற்தகுதி பெற முடியவில்லை. இதையடுத்து அவர் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் போனது.
டி20 போட்டி
தற்போது பயிற்சிகள் முடிந்த நிலையில், பண்டியா உள்ளூர் டி20 தொடரான டிஒய் பாட்டில் டி20 தொடரில் பங்கேற்றார். அந்த தொடரில் முதல் போட்டியில் அதிரடி சிக்ஸர்கள் அடித்து தான் பார்மில் இருப்பதை உணர்த்தினார்.
அதிரடி சதம்
தொடர்ந்து இரண்டாவது போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடிய ஹர்திக் பண்டியா 8 ஃபோர், 10 சிக்ஸர்கள் விளாசி 37 பந்தில் சதம் கடந்து மிரட்டினார். 39 பந்தில் 105 ரன்கள் குவித்தார் அவர். வெறும் 8 டாட் பால்கள் மட்டுமே ஆடினார்.
ஆல் - ரவுண்டர் ஆட்டம்
அவரது அதிரடி ஆட்டத்தால் அவர் ஆடிய ரிலையன்ஸ் 1 அணி 20 ஓவர்களில் 252 ரன்கள் குவித்தது. எதிரணியான சிஏஜி அணியின் 5 பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தி பந்துவீச்சிலும் மிரட்டினார் பண்டியா. ஆல் - ரவுண்டராக தன் பார்மை முழுமையாக நிரூபித்தார்.
அணியில் இடம் பெறுவார்
இந்தப் போட்டியில் ரிலையன்ஸ் 1 அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. அந்த தொடரில் ஹர்திக் பண்டியா இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.
|
பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி
இந்திய அணியில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆல் - ரவுண்டர் பிரச்சனைக்கு ஹர்திக் பண்டியா முற்றுப் புள்ளி வைப்பார் என கருதப்படுகிறது. பண்டியா வருகையால் ஒருநாள் அணியில் இருந்து கேதார் ஜாதவ் தன் இடத்தை இழக்க நேரிடலாம்.